அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சி.. அப்போது அன்புமணி எங்கே போனார்? அமைச்சர் ராஜேந்திரன் பதிலடி!
சென்னை: சேலம் மாவட்டத்தில் பாமக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வன்னியர்களுக்கு 15 சதவிகித இடஒதுக்கீடு வழங்க எம்ஜிஆர் சட்டம் கொண்டு வரவிருந்தார். ஆனால் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார். ஜெயலலிதா எந்த நன்மையும் செய்யவில்லை, தீமையும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி 10.5 உள்ஒதுக்கீடு கொண்டு வந்தார்.
அது ரத்து செய்யப்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரணமாக இருந்தார். வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் மு.க.ஸ்டாலின் தான் என்று தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ராஜேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இடஒதுக்கிடு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டிக் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது தைலாபுரத்தில் தலைவலியை ஏற்படுத்திவிட்டது போல.. அன்புமணி புலம்பி தள்ளி இருக்கிறார்.

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று சொல்லி இருக்கிறார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட இலவச செல்ஃபோன், மோனோ ரயில் என்று பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றால் வாக்காளர்களுக்கு பட்டை நாமம் சாத்தினார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ஆட்சி அமைந்ததும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது எல்லாம் தமிழக அரசியலில் நடக்காத நிகழ்வாகும். கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கேட்டு 1987ல் வன்னியர்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி முனையில் ஒடுக்கியது அன்றைய அதிமுக ஆட்சி தான். வன்னியர் சமுதாயத்திற்கு பாடுபட்டு வரும் திமுக, 1989ல் ஆட்சிக்கு வந்த 43வது நாளில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவிகித தனி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டது.
அதோடு நிற்கவில்லை. வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி தான். 1987 இடஒதுக்கீடு போராட்டத்தின் போது 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரு மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்தார். அந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார். இடையில் அதிமுக என்ன செய்தது என்பது அன்புமணிக்கே வெளிச்சம். கட்சிக்கு தலைவர்கள் மாறலாம், முதலமைச்சர்கள் மாறலாம்.. ஆனால் சமூகநீதி தூக்கி பிடிக்கும் திமுகவின் கொள்கைகள் மாறவில்லை.
ராமதாஸுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணிக்கு வன்னியர்களுக்கு திமுக செய்தது என்ன, என்பதெல்லாம் தெரிய போவதில்லை. அதற்காக வரலாற்றை யாரும் மாற்றி எழுதிவிட முடியாது. அன்புமணி அவர்களே.. உங்கள் தந்தை எழுதிய அதிமுக வரலாறான கழகத்தின் கதை புத்தகத்தை புரட்டி பாருங்கள். அதில் 19வது அத்தியாத்திற்கு ராமதாஸ் வைத்த தலைப்பு என்ன தெரியுமா? வன்னியர் எம்ஜிஆருக்கு அந்நியர்! அந்த அத்தியாசத்தில் ராமதாஸ் என்ன செல்லி இருந்தார் தெரியுமா?
இடஒதுக்கீடு போராட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்ட போதிலும், பேச்சுவார்த்தை நடத்த எம்ஜிஆர் அரசு முன்வரவில்லை. ஒரு நடிகையின் மகன் பூணூல் திருமணத்தில் பங்கேற்கவும், ஒரு நடிகரின் தங்கைகள் திருமணத்தில் பங்கேற்பதற்காகக் கோவை செல்லவும் எம்ஜிஆருக்கு நேரம் இருந்தது. ஆனால், தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் சமூக நீதிக் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்க நேரம் இல்லை' என ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். ராமதாஸ் எழுதிய கழகத்தின் கதையைப் படித்துவிட்டு அன்புமணி, 'பாமக குழப்பத்தின் கதை'யை எழுதலாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications