நடிகர் பார்த்திபனுக்கு 100 முறை போன் செய்த அமைச்சர் சேகர்பாபு! எதற்காக இந்த அழைப்பு? பின்னணி என்ன?
சென்னை: கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுமாறு நடிகரும் இயக்குநருமான பார்த்திபனுக்கு அமைச்சர் சேகர்பாபு நூறு முறைக்கு மேல் போன் அடித்த நிகழ்வு நடந்துள்ளது.
அமைச்சர் சேகர்பாபு போனில் அழைக்கும் போதெல்லாம் திரைப்பட பணிகள் காரணமாக ரொம்ப பிஸியாகவே இருந்திருக்கிறார் பார்த்திபன்.
அமைச்சர் தனக்கு இத்தனை முறை போன் செய்ததையும், தாம் பிஸியாக இருந்ததையும், பார்த்திபனே நேற்று வெளிப்படையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி பிறந்தநாள்
கருணாநிதி பிறந்தநாள் விழாவை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. தொடர்ந்து பல்வேறு ஆளுமைகளை அழைத்துச்சென்று பிறந்தநாள் கூட்டத்தை நடத்தி வரும் இவர், நடிகரும், இயக்குநருமான பார்த்திபனை அழைத்து கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த விரும்பியிருக்கிறார். இதற்காக அவர் 100 முறைக்கும் மேல் பார்த்திபனை தொடர்பும் கொண்டிருக்கிறார்.

ரொம்ப பிஸி
ஆனால் இரவின் நிழல் திரைப்படப் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருந்ததால், அமைச்சர் அழைத்த போதெல்லாம் தனக்கிருக்கும் பணிகளை கூறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்திருக்கிறார் பார்த்திபன். பிறகு ஒரு வழியாக அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் நேற்று சென்னையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பார்த்திபன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அமைச்சர் தனக்கு இத்தனை முறை போன் செய்ததையும், தாம் பிஸியாக இருந்ததையும், வெளிப்படையாக தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு பாராட்டு
கருணாநிதி இல்லை என்கிற வருத்தம் ஏற்படாத வகையில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும் கருணாநிதியின் ஹியூமர் சென்ஸ்க்கு இணையாக வேறு யாராலும் பேச முடியாது எனவும் பார்த்திபன் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து கருணாநிதிக்கும் தனக்கும் இருந்த தொடர்பு பற்றி பேசிய அவர், அமைச்சர் சேகர்பாபுவை பிரம்மாண்டத்தின் கேப்டன் என புகழ்ந்து தள்ளினார்.

சேகர்பாபு மட்டுமே
தனக்குத் தெரிந்து சேகர்பாபு மட்டுமே மாதத்துக்கு 60 நிகழ்ச்சிகள் கட்சிக்காக நடத்தக்கூடிய அமைச்சர் என்றும் அவரது சுறுசுறுப்பும் வேகமும் பிரமிக்க வைப்பதாகவும் பார்த்திபன் பேசினார். எல்லாம் பேசிவிட்டு நிகழ்ச்சியின் ஹைலட்டாக கருணாநிதி மட்டும் இன்று இருந்திருந்தால் இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு அவரே பல விருதுகளுக்கு அதை பரிந்துரை செய்திருப்பார் எனத் தெரிவித்தார் பார்த்திபன்.












Click it and Unblock the Notifications