விளம்பரத்திற்காக அண்ணாமலை இந்த வேலை பார்க்கிறார்.. 2 முறை திருமணம்.. அமைச்சர் சேகர்பாபு காட்டம்!
சென்னை: ஏற்கெனவே திருமணம் ஆன தம்பதிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் திருமணம் செய்து வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, விளம்பரத்திற்காக அண்ணாமலை திருமணம் நடத்தி வைக்கிறார் என விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாள் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதில் இரு ஜோடிகளுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து குழந்தை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அண்ணாமலை திருமணம் நடத்தி வைத்த அடுத்த நாள், அதில் ஒரு தம்பதியர் தங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் பார்ட்டி நடத்தியுள்ளனர். கிடங்கல் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் - எபிசேன் தம்பதிக்கு குழந்தை இருக்கும் நிலையில், அண்ணாமலை தலைமையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த திவாகர் என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், மீண்டும் அண்ணாமலை முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே திருமணமான ஜோடிகளுக்கு அண்ணாமலை திருமணம் செய்து வைத்த விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலையையும், பாஜகவினரையும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக பல மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "விளம்பரத்திற்காக அண்ணாமலை திருமணம் நடத்தி வைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்த திருமணங்கள் கருணை உள்ளத்தோடு நடத்தப்பட்டவை. கடந்த ஆண்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 34 திருமணங்களை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications