ஆகம விதி அனுமதித்தால்.. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தங்க கலசம்.. அமைச்சர் சேகர் பாபு உறுதி
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோவிலான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தங்க கலசம் அமைக்க ஆகம விதிகளுக்கு உட்படுமேயானால் நிச்சயம் அது செய்து தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் இதனைக் கூறினார்.
மேலும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் குறித்த விவரத்தையும் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

தமிழக சட்டசபை
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக சட்டசபை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்கள் ஒவ்வொருவர் எழுப்பிய கேள்விகளுக்கும் தொடர்புடைய துறைகளின் அமைச்சர்கள் பதிலளித்தனர். அந்த வகையில் நெல்லை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தங்ககலசம் அமைக்கப்படுமா என வினவினார்.

அமைச்சர் சேகர்பாபு
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கடந்தாண்டு ஜூன் 3-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தாம் நேரில் ஆய்வு செய்து அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சுமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் கூரைப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

தங்ககோபுரம்
ஆகம விதிகளுக்கு உட்படுமேயானால் முதலமைச்சருடன் கலந்து பேசி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தங்ககோபுரம் அமைத்து தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள இந்த புதிய தகவல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

உலகப் புகழ்
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை பொறுத்தவரை உலகப் புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல முக்கிய வி.ஐ.பி.க்கள் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications