பழம் நீயப்பா..ஞானப்பழம் நீயப்பா! ஒளவையாருக்கு மணிமண்டபம்! வேற லெவலில் டிசைன் செய்யச் சொன்ன ஸ்டாலின்
சென்னை: சங்ககால தமிழ் புலவரான ஒளவையாருக்கு ரூ.12 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுவது உறுதி என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஒளவையார் மணிமண்டபம் தொடர்பான வரைபடம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு அது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இன்னும் சிறப்பாக டிசைன் செய்யக் கூறியதால் மறுவடிவம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சேகர்பாபு தெரிவித்தார்.
ஒளவையார் என்றாலே சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் பழம் நீயப்பா.. ஞானப்பழம் நீயப்பா என்ற பாடல் காட்சிகளும், ஒளவையார் கதாபாத்திரமாகவே அந்த திரைப்படத்தில் வாழ்ந்த கே.பி.சுந்தராம்பாளும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.

தமிழ் புலமையால் காலத்தால் அழியாத புகழோடு விளங்கும் ஒளவையாருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக நாகை மாவட்டம் துளசியாபட்டினத்தில் ஒளவையார் மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த 2022 -2023ஆம் நிதியாண்டில் சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அந்த அறிவிப்பு என்னவானது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒளவையாருக்கு ரூ.12 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுவது உறுதி எனக் கூறினார்.
ஒளவையார் மணிமண்டபம் தொடர்பான டிசைனை இன்னும் சிறப்பாக மாற்றி கொண்டு வருமாறு முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும், நான்கைந்து மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்படும் எனவும் சேகர்பாபு கூறினார்.
அதேபோல் ஒளவையார் மணிமண்டப திறப்பு விழாவுக்கு நிச்சயம் நீங்களும் அழைக்கப்படுவீர்கள் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியனிடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications