'உப்பை தின்றால் தண்ணீர் குடிக்கணும்.. தவறு செய்யவில்லை என்றால் அச்சம் ஏன்'..அமைச்சர் சேகர்பாபு பளிச்
சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற ரெய்டுக்கு அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கண்டம் தெரிவித்து வரும் நிலையில், உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்,
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்கு அதிமுகவை சேர்த்த முக்கிய தலைவர்கள் பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதிமுக கண்டனம்
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆதாரம் இன்றி ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். திமுக அரசு பழி வாங்குவதை விட்டுவிட்டு மக்கள் பணியில் திமுக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் சேகர் பாபு
அறப்போர் இயக்கம் உள்ளிட்டோர் அளித்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் திமுக அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து அமைச்சர் சேகர் பாபு, உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்தாக வேண்டும் என விமர்சித்துள்ளார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் சேகர் பாபு, "அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை அனைவருமே பாராட்டி வருகின்றனர். கோயில்களில் உள்ள குளங்கள், தேர்கள், கோசாலைகளை முறையாகப் பராமரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல கோயில்களிலும் தொடர்ச்சியான ஆய்வுகளை நடத்தி வருகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் இதுவரை 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் 75 பேர் 35 வயதைக் கடந்தவர்கள் ஆரும். எனவே, முதலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு 35 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கவுள்ளோம். அதேபோல ஆண்டுக் கணக்கில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைத் தண்டிக்க வழிவகை செய்யும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
Recommended Video

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். அவர் எந்தவொரு தவற்றையும் செய்யவில்லை என்றால் அதை நீதிமன்றத்தில் கூறட்டும். மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அரசின் கடமை. அதேபோல தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டியதும் அரசின் கடமை தான் அரசின் கடமை தான். காமாலை நோய் வந்தவனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் நிறமாகத் தான் இருக்கும் என்பது போல அவர்கள் சொல்வது இருக்கிறது" என்று கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications