திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. அமைச்சர் சேகர்பாபு எடுக்கப் போகும் முக்கிய முடிவு
சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 7,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 77 ஆயிரத்து 968 ஏக்கர் நிலங்கள் ரேவர் கருவியின் வாயிலாக அளவீடு செய்திருக்கிறோம். கணினி சிட்டா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடிஆர் தவறுகள் மேல்முறையீடு செய்து 6 ஆயிரத்து 715 ஏக்கர் திரும்பவும் திருக்கோயிலின் பெயரில் பெறப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினை போல அதிர்ந்து பேசாத முதல்வரை யாரும் பார்த்திருக்க முடியாது. துணை முதலமைச்சர் சிரித்த முகத்துடனே காட்சியளிக்க கூடியவர். ஆணவம் என்பது எங்களுக்கு எந்தக் காலத்திலும் கிடையாது. அமைச்சர் ஜெயகுமார் தான் ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
ஒரு முறை கூட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பேசமாட்டார். அதேபோல, தகாதவார்த்தையை பேசக்கூடியவர் ஜெயகுமார். திமுகவைப் பொருத்தவரையில் வளர்ந்து வரக்கூடிய இயக்கம். அவர் கூற்றுக்கு எல்லாம் நமக்கு பெரிய விளம்பரம் தேவையில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிந்தால் அவர் அதே ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு சட்டமன்றத்திற்கு வரட்டும். அதற்குப் பின்னர் இதுபோன்று கேள்வி எழுப்பினால் அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம்.
சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் தயாராக இருக்கிறது. முதல்வர், துணைமுதல்வர், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோ் களத்திலே நின்று பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பிற மாவட்டங்களில் பருவமழை வரும், மீண்டும் மழை தொடரும் என்கிற பகுதியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எந்த சூழலையும் எதிர்கொள்ள திமுக அரசு தயாராக இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர், அறநிலையத் துறை செயலாளர், மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இன்று மாலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவில் உள்ள சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு, எவையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமோ அவற்றை பரிசீலித்து, வருகின்ற பக்தர்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
திருவண்ணாமலையில் எதிர்பாராத, நடக்கக் கூடாத சோகம் ஒன்று நடந்திருக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு ஆய்வின் இறுதியை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கார்த்திகை தீபத் திருவிழா கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்படும் என்றார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் மற்றும் மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
இந்த மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் காணலாம். கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் டிசம்பர் 17 ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது.












Click it and Unblock the Notifications