ஜனவரி 16-இல் பொங்கல் விடுமுறை ரத்தா.. எழுந்த சர்ச்சை..செங்கோட்டையன் மறுப்பு
சென்னை: மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசுவதால் ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை ரத்து என்ற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள அவர்கள் நம்பிக்கையுடன் தேர்வு எழுதுவதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் அன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பார்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

பெருங்குழப்பம்
இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விடுமுறை ரத்து
அதாவது 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம். எப்போதும் மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் பிரதமர் நிகழ்ச்சியை காண வைப்பதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறையை ரத்து செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

ஸ்டாலின்
இதை கண்டித்து வரும் 16-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜனவரி 16-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை.

அமைச்சர் மறுப்பு
பிரதமர் உரையை கேட்க மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்ற தகவல் உண்மையில்லை. விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். வரமுடியாதவர்கள் பிரதமர் உரையை மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கேட்கலாம். எனவே பொங்கலுக்கு அடுத்த நாள் விடுமுறை ரத்து என்ற தகவலை மறுத்தார் அமைச்சர் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications