வெளிநாடு வாட்ச்தான் தேசபக்தியா.. "வேலியில் போகிற ஓணானை எடுத்து"..அண்ணாமலையை விளாசிய செந்தில் பாலாஜி
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. 4.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான இந்த வாட்சை அண்ணாமலை வாங்கியது எப்படி, ஏழை விவசாயி என்று கூறிக்கொள்ளும் அவர் இப்போதே இவ்வளவு லட்சம் மதிப்புள்ள வாட்சை வாங்கியது எப்படி என்று திமுகவினர் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கருப்பு நிற பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் வாட்ச் ஆகும் இது. இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
4.40 லட்சம் மதிப்புள்ள இந்த வாட்சை அண்ணாமலை கட்டிக்கொண்டு திமுகவினரை பணக்காரர்கள் என்று விமர்சனம் செய்வது சரியா என்று திமுகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இணையத்தில் பாஜக - திமுகவினர் இடையே கடுமையான விவாதத்தை இந்த வாட்ச் ஏற்படுத்தி உள்ளது.

வாட்ச் விவாதம்
அண்ணாமலையின் இந்த வாட்ச் விவகாரம் பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான விமர்சனங்களை நேற்று வைத்தார். அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் செந்தில் பாலாஜி வைத்த விமர்சனத்தில், பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

ரசீது எங்கே?
வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் கேள்விக்கு நேற்று இரவு அண்ணாமலை பதில் அளித்தார்.

அண்ணாமலை பதில்
அதில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும். இந்திய ராணுவத்தின் ரபேல் விமானம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை ஓட்டும் பாக்கியம்தான் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதை வைத்து உருவாக்கப்பட்ட வாட்சை அணியும் பாக்கியம் கிடைத்து உள்ளது. எனக்கு இது போதும். நான் தேசியவாதி அதனால் இந்த வாட்சை அணிகிறேன். இதை வைத்து பிரிவினைவாதிகள்தான் சர்ச்சை செய்வார்கள். உலகில் இது போல 500 வாட்ச்கள்தான் உள்ளது. இதில் என்னுடைய வாட்ச் 149ஆவது வாட்ச்சாகும், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

செந்தில் பாலாஜி
இதற்கு தற்போது செந்தில் பாலாஜி கொடுத்துள்ள பதிலடியில், சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பில் எங்கே?
பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications