செந்தில் பாலாஜி வழக்கில் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு.. தேதி குறித்த நீதிபதி! திருப்பம் ஏற்படுமா?
சென்னை: பணப் பரிமாற்ற வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் புழல் சிறையில் உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் பதிவு செய்துள்ள, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக தேதி நிர்ணயிக்கப்பட்டது.

அன்றைய தினம் செந்தில் பாலாஜி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 3 பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை துவங்கக் கூடாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும் என வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை என்றும் இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதற்கு பதில் அளித்து அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை வரும் 15அம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி அல்லி. செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சாதகமான முடிவு கிடைக்குமா என்பது பிப்ரவரி 15ஆம் தேதி தெரியவரும்.












Click it and Unblock the Notifications