இந்த கோடை காலத்தில் மின் வெட்டே இருக்காதாம்.. சூப்பர் பிளானோடு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: கோடை கால மின் தேவையை ஈடு செய்ய 6,000 மெகாவாட் மின்சாரம் பெற டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோடைகாலத்தில் தமிழ்நாட்டின் மின் தேவை எப்போதும் அதிகரிக்கும். கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் பெரும்பாலானோர் எந்நேரமும் ஃபேன், ஏசி பயன்படுத்துவார்கள் என்பதால் மின் தேவை அதிகரிக்கும். அதன் காரணமாக பல இடங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு மின் வெட்டு நடக்கும். அதைத் தவிர்க்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு கோடை காலத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மின் தேவையானது சுமார் 22 ஆயிரம் மெகா வாட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய மின் தேவையை ஈடு செய்ய வெளி சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கப்பட உள்ளது.
சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடைக் காலத்தில் சீரான மின் விநியோகம் அளிப்பது குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மின்சாரத்துறையின் மண்டல தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோடைக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் எவ்வித மின் தடையும் இல்லாமல் சீராக மின் விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
எங்கெல்லாம் ஓவர்லோடு மற்றும் லோ வோல்டேஜ் இருக்கிறதோ அதையெல்லாம் கவனத்தில் கொண்டு புதிய பகுதியில் 78 ஆயிரம் மின்மாற்றிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு அதில் 250 துணை மின் நிலையங்களுக்கு நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுத் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இப்பொழுது பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கோடைக் காலத்தில் சுமார் 22 ஆயிரம் மெகாவாட் மின் தேவை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வழக்கத்தை விடக் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சாரம் தேவைப்படும். எனவே வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு தேவையான கூடுதல் மின்சாரத்துக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.
மின்சாரத்துறையில் மூன்றில் 1 ஒரு பங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆகையால் மின்சாரத்துறையில் உள்ள அவசியமான காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications