230 நாட்களை கடந்த ஜெயில் வாழ்க்கை.. அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் இன்று 17வது முறையாக நீட்டிப்பு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 17 ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. வரும் ஜனவரி 31ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் அடுத்தகட்டமாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த ஜனவரி 11ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஜனவரி 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த புதிய மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றச்சாட்டுக்கள் பதிவையும் தள்ளிவைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதவிர நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவையும் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களுக்கும் பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டார். இதன்மூலம் 16வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 17வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 230 நாட்களை கடந்தும் ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஜாமீன்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி 2 ஆவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications