13 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம் எதுவுமில்லை! சொல்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி!
சென்னை: மதுவிலக்கு அமலாக்கத்துறையின் சிறப்பான நடவடிக்கைகளால் கடந்த 13 ஆண்டுகளாக கள்ளச்சாராய இறப்பு எதுவும் மாநிலத்தில் நிகழ்வில்லை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கல்லூரி மாணவர்கள் இடையே மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இணைய வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள மேலும் சில முக்கிய தகவல்கள் வருமாறு;

கள்ளச்சாராய இறப்பு
மதுவிலக்கு அமலாக்க துறையின் சிறப்பான நடவடிக்கையினால் கடந்த 13 வருடங்களாக கள்ளச்சாராய இறப்பு ஏதும் மாநிலத்தில் நிகழவில்லை. சில மாவட்டங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறும் நிலையில், கள்ளச்சாராய தடுப்புச் சோதனைகள் அவ்வப்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. உயிரிழப்புகள் நிகழ்வதற்கு 'மெத்தனால்' முக்கியமான காரணமாகும். மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள், அப்பொருளை வைத்திருக்க மற்றும் பயன்படுத்த உரிமம் பெற்ற நிறுவனங்கள் முதலியவற்றை சோதனையிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களால் அனுப்பப்படும் மாதாந்திர அறிக்கை அமலாக்க தலைமையிடத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

நீரா பானம்
தென்னை மரத்தின் பூம்பாளையிலிருந்து வரும் சாற்றிலிருந்து நொதிப்பு எதிர்ப்பு தொழில் நுட்பத்தினை (Anti Fermention Technology) பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத ஊட்டச்சத்து பானமே நீரா ஆகும். தென்னை மரங்களிலிருந்து சேகரிப்பதற்கும், நீராவிலிருந்து இதர பொருட்கள் தயாரிப்பதற்கும் உரிமங்கள் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீராபானம் தயாரிக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

பதநீர்
பனை மரம், ஈச்ச மரம் மற்றும் அவை போன்ற மரங்களின் பூம்பாளையிலிருந்து, நொதிக்க விடாமல் சேகரிக்கப்படும் பிரபலமான ஊட்டச்சத்து பானமே பதநீர் ஆகும். பதநீரை சேகரிக்கவும், இருப்பு வைத்துக் கொள்ளவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும், விநியோகம் செய்யவும் மற்றும் பதநீரிலிருந்து பொருட்களைத் தயாரிப்பதற்கும் உரிமம் வழங்கப்படுகிறது.

பீர் ஏற்றுமதி
தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு பீர் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி அனுமதி இணைய வழியில் வழங்கப்பட்டு வருகிறது.
உரிய சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர், பிற நாடுகளிலிருந்து அயல்நாட்டு மதுபான வகைகளை இறக்குமதி செய்வதற்கு மதுவிலக்கு
மற்றும் ஆயத்தீர்வை ஆணையரால் அனுமதி ஆணைகள் வழங்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications