திமுகவிலிருந்து ஒரு தீபாவளி வாழ்த்து.. பெரியார் டூ உதயநிதி! ஐவர் படத்துடன் செந்தில்பாலாஜி ட்வீட்
சென்னை: திமுக தலைவர்கள் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் திமுகவை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாழும் இந்து மக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு மக்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.
சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி பண்டிக்கைக்கு தேவையான உணவு, பூஜை பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

தீபாவளி வாழ்த்து
இது ஒருபக்கம் இருக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தொடங்கில் இந்திய அளவில் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள் என அனைவரும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வழக்கம்போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை.

வாழ்த்தாத திமுக
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் தீபாவளி வாழ்த்தை சொல்லாமல் தவிர்த்து வந்தார். பொங்கல் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதே வழிமுறையை கடைபிடித்து பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி
அவரது மகன் உதயநிதி, திமுக மூத்த நிர்வாகிகள், திமுக அமைச்சர்களும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். அண்மையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

பாஜக கண்டனம்
இதனை சுட்டிக்காட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த சூழலில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பிலோ, திமுக சார்பிலோ வாழ்த்துக்கள் வரவில்லை.

செந்தில்பாலாஜி வாழ்த்து
இதற்கிடையே தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "அன்பினால் இல்லங்கள் ஒளிரட்டும், உள்ளங்கள் மகிழட்டும்.. அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.. களிப்புடனும் கவனத்துடனும் கொண்டாடுவோம்." என்று பதிவிட்டு உள்ளார்.

பெரியார் டூ உதயநிதி
அத்துடன் அவர் பகிர்ந்து இருக்கும் படத்தில் ஒரு ஓரத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் படங்களும் இடம்பெற்று உள்ளன. "அதில் இல்லங்கள் ஓளிரட்டும், உள்ளங்கள் மகிழட்டும்." என்று தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications