முத்தமிழ் முருகன் மாநாட்டால் வயிற்றெரிச்சல்..பேசுறவங்க பேசிட்டு போகட்டும்! அமைச்சர் சேகர்பாபு சுளீர்
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முத்தமிழ் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், திமுகவினர் ஆன்மீகத்தை கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியிருந்தார். இந்நிலையில் மாநாடு சிறப்பாக நடந்து விட்ட வயிற்றெரிச்சலில் சிலர் பேசியிருக்கலாமென கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாநாட்டில் ஆய்வு கட்டுரைகள் உள்ளிட்டவை சமர்பிக்கப்பட்ட நிலையில், நிறைவு நாளில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் சில தீர்மானங்கள் கல்வியைக் காவி மயமாக்கும் வகையில் இருப்பதாக விசிக எம்பி ரவிக்குமார் விமர்சித்திருந்தார்.
மேலும் இது ஆன்மீக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மீகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது. ஆன்மிகத்தை திமுகவினர் கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தமிழக பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் பேசியிருந்தார். இந்நிலையில் மாநாடு சிறப்பாக நடந்து விட்ட வயிற்றெரிச்சலில் சிலர் பேசியிருக்கலாமென கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து சமுதாயத்தினரையும் இரு கண்களாகவும் இரு கரங்களாகவும் பார்க்கிறார். சிறுபான்மையினர் அழைக்கும் போதெல்லாம் அவர்கள் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் கூட எல்லோருக்கும் எல்லாம் என்றே முதலமைச்சர் பேசினார்.
நேரமின்மை காரணமாக தான் அவர் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த ஆட்சியை பொருத்தவரை இன்னார் இனியவர் என்று இல்லை. அனைவரின் ஆதரவோடு ஒட்டுமொத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மீண்டும் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துமா என கேட்கிறார்கள். முருகனின் ஆசியும் முதல்வரின் உத்தரவும் கிடைத்ததால் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இது மாவட்ட மாநாடு, மாநில மாநாடு அல்ல உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாடு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியும் முருகனின் ஆசியும் இருந்தால் இது போன்ற மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்படும். ஆன்மீகத்தை கையில் எடுக்காமல் ஆட்சி செய்ய முடியாது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் வேலை கையில் எடுத்தார். அப்போது மக்கள் என்ன தீர்ப்பு கொடுத்தார்கள். ஒரு கருத்து வருகிறது என்றால் அந்த கருத்து யாரிடம் இருந்து வருகிறது என்பதை பொறுத்து தான் கருத்து சொல்ல முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேலை ஏந்தி கொண்டு பாஜகவினர் ஊர் ஊராக சென்றார்கள். ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பு வேறாக இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பின் முழுமுதற் கடவுளான முருகரே பிற தெய்வங்களின் ஆசியோடு மாநாடு நடத்த வேண்டும்.
தனது புகழ் கடல் கடந்து செல்ல வேண்டும் என தேர்ந்தெடுத்து நடத்த வைத்திருக்கிறார். பாஜகவினருடைய கருத்துக்களை புறக்கணித்து சிறப்பான முறையில் ஆட்சி நடத்தியதால் தான் 2024 தேர்தலில் மீண்டும் அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதில் யார் சொல்வது உண்மை என்று தெரிந்து பேச வேண்டும். ஆன்மீகம் வேறு அரசியல் வேறு. மாநாடு சிறப்பாக நடந்து விட்டது என்ற வயிற்றெரிச்சலில் கூட சில பேர் பேசலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications