களத்தில் இறங்கிய அமைச்சர் சிவசங்கர்.. ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்க அதிரடி ரெய்டு
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுமுறை காலத்தை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பண்டிகை, விடுமுறை காலங்களில் அதிகளவிலான மக்கள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று திரும்புவது வழக்கமாக உள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் ரயில் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்திருக்கின்றனர். பண்டிகை கால சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கினாலும் தனியார் பேருந்துகளில் கணிசமான கூட்டம் ஊர்களுக்கு செல்லும்.

தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளை
பொதுமக்களின் இயலாமையை பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட பன்மடங்கு விலையை உயர்த்தி பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதும் வழக்கமாக உள்ளது. பொதுமக்களும் வேறு வழியின்றி ஊருக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் செல்கின்றனர்.

4 நாட்கள் தொடர் விடுமுறை
ஊரிலிருந்து மீண்டும் பணிக்கு திரும்பும்போதும் இதே நெருக்கடியை பயணிகள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை தடுக்க வேண்டும் என்பது பயணிகள் பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நாளை முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, சனி, ஞாயிறு விடுமுறை என 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்தனர்.

பயணிகள் குற்றச்சாட்டு
சென்னையிலிருந்து செல்லும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் பலர் கருத்து தெரிவித்தனர்.

அமைச்சரின் அதிரடி ரெய்டு
இதனிடையே யாரும் எதிர்பாராத வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் சென்ற தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்துகளில் ஏறி சோதனையிட்டார். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்பதை பயணிகளிடமும் அவர் கேட்டறிந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உறைந்துபோய் நின்றனர்.

ஆன்லைனில் கூடுதல் கட்டணம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. போக்குவரத்து ஆணையர்கள் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியும் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மீண்டும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் இன்று மாலையிலிருந்து ஒரு இணை ஆணையர் மற்றும் 5 ஆர்.டி.ஓக்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர்.
|
3 பேருந்துகளில் கூடுதல் வசூல்
இதில் 3 பேருந்துகளில் 2, 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மக்களின் பயணம் தடைபட்டுவிடக்கூடாது என்பதால் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications