தொடர்ந்து குறையும் கொரோனா.. தமிழகத்தில் தியேட்டர் திறப்பு எப்போது.. அமைச்சர் சாமிநாதன் பதில் இதுதான்
சென்னை: கொரோனா பரவின் 3அலை எச்சரிக்கை இருப்பதால் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்துத் தான் முடிவெடுக்க முடியும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை ஏற்பட்டது. அப்போது நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டன.
அப்போது பல மாதங்கள் தியேட்டர்கள் மூடியே இருந்தன. வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்த பிறகே நாட்டில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.
கொரோனா 2ஆம் அலை
இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை பரவ தொடங்கியது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் 2ஆம் அலையின் சமயத்தில் வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. இந்தச் சூழ்நிலையில்தான் மாநிலத்தில் உள்ள திரையரங்ககுளை மூட உத்தரவிடப்பட்டது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வைரஸ் பாதிப்பும் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.
அரசு துணை நிற்கும்
இந்தச் சூழ்நிலையில் கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளைச் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்ட வரைவு மசோதாவால் யாராவது பாதிக்கப்பட்டால் அரசு நிச்சயம் அவர்களுக்குத் துணையாக நிற்கும்.
பரிசீலனை
கொரோனா 3ஆம் அலை குறித்த எச்சரிக்கை இருப்பதால் தியேட்டர் திறப்பு குறித்து உடனயிாக எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் குறித்த முடிவெடுக்க மருத்துவ வல்லுநர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆலோசனை, பொதுமக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து நிலைமையைப் பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
3ஆம் அலை
தியேட்டர்களை மீண்டும் திறப்பதால் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்படாது என்ற சூழலில் தான் திரையரங்குகளைத் திறக்க முடியும். மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனம் கொரோனா 3ஆம் அலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை நாம் மறந்து விடக்கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.