"வாலைப் பழம் இல்லை.. வாழை" தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு பரிசு.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும் என தமிழ்வளர்ச்சி மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மேலும், ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
வால்பாறை சாலை விபத்தில் சிக்கிய வாலிபர் மூளைச்சாவு - 5 பேருக்கு கண்கள், சிறுநீரகம், கல்லீரல் தானம்
தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.
தமிழ் உச்சரிப்பு
அனைத்துக் காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் தமிழ் உச்சரிப்புச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும் தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும். இதற்கென ரூபாய் 5 இலட்சம் நிதி ஒதுக்கப்படும்.
மாணவர் மன்றங்கள்
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூபாய் 5 இலட்சம் வீதம் 100 கல்லூரிகளுக்கு ரூபாய் 5 கோடியும் இவ்வாண்டு போட்டிகள் நடத்திட ரூபாய் 36 இலட்சமும் என மொத்தம் ரூபாய் 5.36 கோடி வழங்கப்படும்.
தமிழ் பண்பாடு
தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்படும். இதற்காக ஆண்டுக்கு 2.11 கோடி வழங்கப்படும். தமிழ் இயக்ககம் மற்றும் சார்நிலைகளுக்கு கணினி அச்சுக் கருவி வழங்கப்படும் இதற்கென ரூ. 57 லட்சம் வழங்கப்படும்.
கையெழுத்துப் போட்டிகள்
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை அழகாக எழுதி வருபார்களை ஊக்குவிக்கவும், இதனடிப்படையிய பிற-மாணவர்களுக்குத் தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். இதனை தொடர்ந்து செயல்படுத்த 16.72 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.