என்னாது சம்சாரம் இல்லாம இருப்பீர்களா? என்னால் முடியாது.. ஜி.கே மணியிடம் தங்கம் தென்னரசு கலகல
சென்னை: சம்சாரம் இல்லாமல் கூட இருப்பீங்களா, ஆனால் என்னால் இருக்க முடியாது என தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணியின் பழமொழிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று முதல்நாளே அவை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயத்தமானார்.

அப்போது அவர் அந்த உரையில் முதல் பக்கத்தில் இடம் பெற்றிருந்த பொதுவான விஷயங்களை மட்டும் குறிப்பிட்டு பேசிவிட்டு, தமிழக அரசின் உரையை முழுவதுமாக படிக்காமல் புறக்கணித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆளுநர் உரையை சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தமிழில் வாசித்தார். இந்த உரையை முடித்துக் கொண்டு ஆளுநரை அவர் முன்பே அப்பாவு விமர்சித்து பேசியிருந்தார். மேலும் தனது பேச்சில் சபாநாயகர் அப்பாவு, கோட்சே, சாவர்க்கர் ஆகியோரின் பெயர்களை கூறியிருந்ததால் ஆளுநர் அருகில் உள்ள உதவியாளர்களிடம் அவர் என்ன பேசுகிறார் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நாட்டுப்பண் இசைப்பதற்கு முன்பே அந்த இடத்தை விட்டு அவர் வெளியேறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டுப்பண்ணை அவமதித்துவிட்டதாக பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கோட்சே, சாவர்க்கர் ஆகியோர் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசியும் சில ஒப்பீடுகளையும் செய்ததாலும் நான் அவையிலிருந்து புறப்பட்டேன் என ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படியாக நேற்று அமளி துமளியாக நடந்து முடிந்த சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து தொகுதி பிரச்சினைகளை பேசினர். அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணியும் பேசினார். அவர் பேசுகையில், சம்சாரம் இல்லாமல் மனிதன் வாழலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது.
தாயின் கருவறை பரிசோதனை (ஸ்கேன்) முதல் கல்லறை வரை அனைத்திற்கும் மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டு தமிழகத்தில் மின் நுகர்வோர் 3 கோடி 24 லட்சத்து 65 ஆயிரம் பேர் ஆவர். 2023 ஆம் ஆண்டு 3 கோடியே 31 லட்சத்து 16 ஆயிரம் பேர் என மின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இப்படியாக மின்சாரத்தின் பயன்பாடு தினமும் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் மின் தேவை என்பது 17 ஆயிரம் மெகா வாட்ஸ் ஆகும். ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி 16, 915 மெகா வாட்ஸ். பற்றாக்குறையை நாம் வெளியில் வாங்கி கொள்கிறோம்.
நீர் மின் நிலையங்கள் மூலமாக குந்தா, காடம்பாறை, மேட்டூர் ஆகிய பெரிய அணைகள், அத்துடன் சிற்றணைகள், கதவணைகள் என மொத்தம் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் 47 உள்ளது. இவற்றின் மூலமாக 2320 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது. கனமழை பெய்யும் நேரங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
ஆண்டுக்கு 16, 250 மெகா வாட் டிஎம்சி தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. அப்படிப்பட்ட இடங்களில் நீர் மின் நிலையங்கள் அமைத்தால் மிக ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முன் வருமா என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்தார்.
இதையடுத்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் ஜி.கே.மணி, மின்சாரத்தின் தேவையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி பேசினார். துவக்கத்தில் பேசிய போது சம்சாரம் இல்லாமல் இருந்து விடலாம் என சொன்னார்கள். இதை எத்தனை பேர் உறுதியாக ஏற்றுக் கொள்வார்கள் என தெரியவில்லை, ஆனால் நான் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
மின்திட்டங்களை பொருத்தமட்டில் உறுப்பினர் ஜி.கே. மணி கூறியதை போல் பல்வேறு மின் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அனல் மின் நிலைய திட்டங்கள், காற்றாலை மூலமாக இருக்கக் கூடிய மின் உற்பத்தி திட்டங்கள், புனல் மின் நிலைய திட்டங்கள் என பல திட்டங்களை நாம் உருவாக்கி வருகிறோம். பொதுவாக உலகில் மரபு சாரா எரிசக்தியை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கிவிட்டோம்.
வெளிநாடுகளில் அனல் மின் நிலையங்கள் இருக்கும் இடங்களில் எங்கு மாசுகள் உற்பத்தியாகிறதோ அந்த இடங்களில் அபராதம் விதிக்கும் நிலை உள்ளது. காற்றாலை, சூரிய மின் திட்டங்களுக்கான முதலீடுகள் தென் தமிழகத்தை நோக்கி வருகின்றன. எனவே தமிழகமானது மரபு சாரா எரிசக்தியை உருவாக்குவதில் முன்னணி வகித்து வருகிறது. இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications