வெள்ள நிவாரண நிதி ரூ.944 கோடி வந்திருச்சுனு நினைக்கிறேன்.. அமைச்சர் தங்கம் தென்னரசு ரியாக்ஷன்!
சென்னை: தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 944 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது குறித்து சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கடுமையாக மழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கடும் மழை ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரேஷன் அட்டை வாரியாக ரூ.2000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ. ரூ.944.80 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) மத்திய அரசின் பங்காக 944.80 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெள்ள சேத நிவாரணம் உடனடியாக வழங்கப்படுமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில், மத்திய அரசு ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரணம் அளித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இன்று சிவகாசியில் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வந்திருச்சுனு நினைக்கிறேன்.. வந்துவிடட்டும்.. நன்றி" எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.












Click it and Unblock the Notifications