"11 ஆண்டுகளுக்கு பிறகு வந்துவிட்டார்; அவர் கையசைத்ததும்..” - கண்ணீர் விட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நேற்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது பற்றி உருக்கமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
கருணாநிதியின் சிந்தனையில் உருவான தலைமைச் செயலக கட்டடம், அதிமுக அரசால் மருத்துவமனையாக மாற்றப்பட்ட நிலையில், அந்த வளாகத்திலேயே கருணாநிதியின் சிலை அமைந்துள்ளது பற்றி நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தங்கம் தென்னரசு உருக்கம்
கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வு குறித்து தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தலைமைச் செயலகம். காலையும், மாலையும் எந்தக் கட்டடத்தின் வாயில்கள் அவரது வரவுக்காகத் தினசரி காத்திருந்ததோ, அந்தக் கட்டடத்திற்குப் பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அவர் வந்திருந்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியே வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் எந்தக் கட்டடத்தைப் பார்த்துக் கொண்டே பயணிப்பாரோ, அதே கட்டட வளாகத்தில் நின்று கொண்டு அண்ணா சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கண்ணில் நீர் ததும்பி நின்றது
அங்கிருந்து அவர் கையசைத்த காட்சியைப் பார்த்த போது, என்னையும் அறியாமல் என் நெஞ்சக் கூட்டில் அலைபாய்ந்த உணர்வுகளை என்னால் அடக்க முடியவில்லை. உணர்ச்சிப் பெருக்கால் என் கண்களில் நீர்த்திரையிட்டுத் ததும்பி நின்றதைத் தடுக்க முடியாமல் ஒரு கணம் தடுமாறிப் போனேன்.
எந்த கட்டடத்தைத் தன் சிந்தனையாலும், செயல் திறத்தாலும் பார்த்துப் பார்த்துச் செதுக்கினாரோ, அதே இடத்தில் கருணாநிதி சிலையாக நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.
Recommended Video

எத்தனை எத்தனை நினைவுகள்
அந்தக் கட்டடத்தில் அவருடனான எண்ணற்ற உரையாடல்களை அவரது முகத்தைப் பார்த்த வண்ணம் அசை போட்டுக்கொண்டுருந்தேன். எத்தனை செய்திகள்- எவ்வளவு விஷயங்கள்- என்னென்ன அறிவுரைகள்- எத்தகைய வழிகாட்டல்கள்! அவரின் அன்பு, கோபம், கனிவு என எல்லா உணர்ச்சிகளும் கலந்து வெளிப்பட்ட அந்த கணங்கள் என் கண் முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தன.

அன்பு மகன்
வரலாற்றின் வரிகளில் இருந்து அவரது பெயரை எப்படியேனும் அகற்ற வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, அவரது கனவு சிதைக்கப்பட்ட அதே இடத்தில், அவரது அன்பு மகன் அவரை மீண்டும் அழைத்து வந்து கம்பீரமாக நிலை நிறுத்திய காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

புதிய தலைமை செயலகம்
வரலாறு கருணாநிதியின் பெயரிலாமல் தன் பக்கங்களை ஒருபோதும் நிரப்பிக் கொள்வதில்லை. அவரின் வருகைக்காகத் தான் அது இத்தனை நாள் காத்திருந்தது. அவர் வந்துவிட்டார். பின்னால் இருக்கும் கட்டடம் வேண்டுமானால் இன்றைக்கு மருத்துவமனையாக மாறி இருக்கலாம். ஆனால், அவர் நிற்கும் இடம் - புதிய தலைமைச் செயலகம்!" என அந்தப் பதிவில் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.












Click it and Unblock the Notifications