கனவு கோட்டையில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி... அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல்..!
சென்னை: திமுகவினர் மீது வழக்குப் பதிவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாததால் எடப்பாடி பழனிசாமியால் அவர் முதலமைச்சராக இருந்த போது வழக்குப்பதிய முடியவில்லை என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது கடந்த 4 ஆண்டுகளில் எத்தனையோ வழக்குகள் போட்டிருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி நேற்று கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தங்கம் தென்னரசு.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் 20% பேருக்கு கூட வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

தலைமைச் செயலகம்
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துவருவதாகவும் 2024-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்பதோடு கனவு கோட்டையிலேயே அவர் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

20% பேர்
அதிமுக ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கவேயில்லை என்றும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 20% பேருக்கு கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காத ஆட்சி அதிமுக ஆட்சி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்ற 130 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வலிமை சிமெண்ட்
இதேபோல் தமிழக அரசு சார்பில் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படவுள்ள வலிமை சிமெண்ட் மிகவும் தரமாக இருக்கும் என்றும் மார்க்கெட்டில் உள்ள முன்னணி சிமெண்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக வலிமை சிமெண்ட் உருவெடுக்கும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார். மேலும், சிறந்த பிராண்டாக வலிமை சிமெண்ட் பெயரெடுக்கும் எனவும் கூறினார்.

கண்காணிப்பு
திமுக ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இதனால் மக்கள் நலத்திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்தி வருவதாக கூறினார். 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதற்காக காரணம் தனக்கு தெரியாது என்றும் அது தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மாநில தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.












Click it and Unblock the Notifications