வலுகட்டாயமாக விவசாயிகளிடம் நிலத்தை அரசு பறிக்காது! அமைச்சர் தங்கம் தென்னரசு மிகத் திட்டவட்டம்!
சென்னை: வலுகட்டாயமாக விவசாயிகளிடம் நிலத்தை அரசு பறிக்காது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
தொழில்துறை வளர்ச்சி அடைய வேண்டுமானால் நில வங்கியை உருவாக்க வேண்டிய அவசியமும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஒசூர் அருகே ஏற்கனவே 3 சிப்காட்கள் உள்ள நிலையில் 4-வது சிப்காட் அமைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும் 5,000 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதால் விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அமைச்சர் பதில்
அதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகளிடம் வலுகட்டாயமாக நிலத்தை அரசு பறிக்காது என்றும் கூடுமானவரை விவசாயிகளிடம் பேசி அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை கொடுக்க தொழில்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். நில வங்கியை உருவாக்கினால் தொழில்துறை வளர்ச்சி அடைய முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

45,000 ஏக்கர்
45,000 ஏக்கர் அளவுக்கு நில வங்கியை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகவும் தொழில்பூங்காகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது கூடுமானவரை விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்றும் விவசாய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தங்கள் அறிவுறுத்தியுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

விவசாயிகளிடம் பேசி
எந்த விவசாயிடமும் வலுக்காட்டாயமாக அவர்களது நிலத்தை வாங்க வேண்டும் என்பதில் அரசுக்கு துளியும் விருப்பமில்லை என்றும் கூடுமானவரை விவசாயிகளிடம் பேசி அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை கொடுத்து முழு ஓப்புதல் தந்த பிறகே கையக்கப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள இந்த தகவல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications