"காலடியில் அகழாய்வு செய்த ஆட்சி அல்ல.. கீழடியில் அகழாய்வு செய்த ஆட்சி": அமைச்சர் டிஆர்பி ராஜா ட்வீட்
சென்னை: காலடியில் அகழாய்வு செய்த ஆட்சியல்ல... கீழடியில் அகழாய்வு செய்து தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஆட்சி என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டு முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது நினைவாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7,000 சதுர அடி பரப்பளவில், 12 கோடி ரூபாய் செலவில், திருவாரூர் ஆழித்தேர் போல கலைஞர் கோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், திருமண அரங்குகள், அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவுள்ள விழாவில், கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வருகை தர இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும், கலைஞர் கோட்டத் திறப்பு விழா இன்று திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிகிறது. முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும், கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திறந்து வைக்கவுள்ளனர். இதையடுத்து அங்கு பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, #KalaignarKottam என்ற ஹேஷ்டேக்கில் திமுகவினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி உள்ளது. இந்நிலையில், இந்த ஹேஷ்டேக்கின் கீழ் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காலடியில் அகழாய்வு செய்த ஆட்சியல்ல... கீழடியில் அகழாய்வு செய்து தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஆட்சி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications