9 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! அன்பளிப்பாக சொனாட்டா வாட்ச்!
சென்னை: சென்னையில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மணமக்களுக்கு அன்பளிப்பாக சொனாட்டா நிறுவனத்தின் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார்.
அண்ணாமலையை மையமாக வைத்து வாட்ச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் மணமக்களுக்கு வாட்ச் வாங்கிக் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
கலைஞரும் தமிழும் போல வாழுங்கள்..ஒபிஎஸ்-இபிஎஸ் போல வாழ்ந்து விடாதீர்கள்..மணமக்களுக்கு உதயநிதி அட்வைஸ்
ரூ.6.02 கோடி மதிப்பில்
கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது கொடுத்த நிதி, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கே.எஸ்.இரவிச்சந்திரன் ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.6.02 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியின் 78வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா மாளிகை
தனியார் திருமண மண்டபங்களுக்கு நிகராக பல்வேறு வசதிகளுடன் இந்த சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சமுதாய கூடப் கட்டுமானப் பணிகள் நடைபெற்று இப்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்து திறப்பு விழாவும் கண்டுள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்துக்கு அறிஞர் அண்ணா மாளிகை என பெயர் சூட்டப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
9 ஜோடிகளுக்கு திருமணம்
அத்துடன் புதிய சமுதாய நலக்கூடத்தில் 9 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். இதில் பேசிய போது தான் மணமக்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போல் வாழாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் அறிவுரை வழங்கினார்.
யார் யார் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், நிதி ஒதுக்கியவர் என்ற முறையில் எழும்பூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வான ரவிச்சந்திரனும் பங்கேற்றார்.