சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள்! சனிக்கிழமையும் ஆய்வுக்கூட்டம் நடத்திய உதயநிதி!
சென்னை: சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை இன்று நடத்தி முடித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பொதுவாக சனி, ஞயிறுக்கிழமைகளில் அமைச்சர்கள் தொகுதிகளில் இருப்பார்கள் என்பதால் தலைமைச் செயலகம் விருச்சோடிக் காணப்படும்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் இன்று நடத்திய ஆய்வு காரணமாக சனிக்கிழமையான இன்றும் தலைமைச் செயலகம் பரபரப்பாக காணப்பட்டது.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையானது, அரசினால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரை, முதலமைச்சரால் விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெளியிடப்பட்ட இதர அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது அமைச்சர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றை செயல்படுத்துவதாகும்.

விவரித்த அதிகாரிகள்
சம்பந்தப்பட்ட துறைகளின் மூலமாக ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் மற்றும் அவற்றின் செயலாக்கத்தினை இத்துறை கண்காணிக்கும் முறை பற்றியும், துறைவாரியாக இதுவரை வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு ஆணை வெளியிடப்பட்ட விவரங்கள் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விவரிக்கப்பட்டது.

கள ஆய்வு அலுவலர்கள்
மாவட்ட அளவில் அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாட்டினை கண்காணிப்பதற்காக மாநில அளவில் உள்ள மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாகவும், கள அளவில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கள ஆய்வு அலுவலர்களாகவும் அரசு நியமித்துள்ளது.

என்ன நிலை?
மேலும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையினால் முன்னெடுக்கப்பட்ட சில முத்தாய்ப்பான முயற்சிகளான 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்', 'நான் முதல்வன்' திட்டம், 'தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்' ஆகியவற்றின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் துறை அதிகாரிகளால் உதயநிதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.

விளக்கம் கேட்ட உதயநிதி
ஆய்வின்போது, மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அத்திட்டங்களினால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள் குறித்தும், இத்திட்டங்களை கண்காணிக்கும் விதம் குறித்தும் அமைச்சர் உதயநிதி விரிவாக கேட்டறிந்தார்.

உதயநிதி வலியுறுத்தல்
இந்த ஆய்வில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசின் கண்காணிப்பு அமைப்பாக திறம்பட செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அறிவிப்புகள் ஆணைகளோடு நின்றுவிடாமல் அவை கடைகோடி மக்களையும் சென்றைடையும் வகையில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தகுதியுள்ள பயனாளிகளுக்கு
மேலும் முத்திரை பதிக்கும் முத்தாய்ப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த பல்வேறு சம்பந்தப்பட்ட துறைகளுடன் இத்துறை இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அரசின் திட்டங்கள் வெற்றியடைய சம்பந்தப்பட்ட துறைகளை இத்துறை சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு அறிவிக்கும் பலன்கள் சென்று சேர்வதை இத்துறை மேலும் முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications