சென்னையில் “மாஸ்” காட்டும் நீல நிற பஸ்கள்.. தொடங்கி வைத்த உதயநிதி! அடேங்கப்பா.. இத்தனை வசதிகளா?
சென்னை: 100 தாழ்தள பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று பொது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 88 புதிய மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை தொடங்கி வைத்து, பேருந்தில் ஏறி பயணம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. ஆனால், 2018க்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், முதலில் தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கு அதிக செலவு ஆவதோடு, தாழ்வான படிக்கட்டுகளால் மழை நீர் எளிதில் புகும் என்பதாலும் குறுகலான சாலைகளில் இயக்குவது சிரமம் என்பதாலும் இந்த பேருந்துகளை வாங்கவில்லை என்று வாதிடப்பட்டது. எனினும், தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது சென்னையில் தாழ்தள பேருந்துகள் இயங்கத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், ரூபாய் 66.16 கோடி மதிப்பிலான 88 புதிய மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட தாழ்தள பேருந்துகளை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சென்னை பல்லவன் இல்லம் மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்ட பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணமும் செய்தார் அமைச்சர் உதயநிதி.

மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏற வசதியாக தாழ்தளப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாலையில் இருந்து பேருந்தில் ஏறும் உயரம் குறைவாக இருக்கும் வகையில் படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தாழ்தள படிக்கட்டின் உயரத்தை இடதுபுறத்தில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்க பேருந்தில் Kneeling வசதி செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பேருந்துகளிலும் 35 இருக்கைகளுடன் 75 பயணிகள் மொத்தமாக பயணிக்கும் வகையிலும், பிஎஸ் 6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் சாலைகளில் மேடு பள்ளங்களில் சென்றால் கூட பயணிகளுக்கு எந்தவித அதிர்வுகளும் ஏற்படாத வகையில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நீல நிறத்தில் உள்ள இந்த பேருந்துகளில் தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, சிசிடிவி கேமரா, சார்ஜிங் வசதி, மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருக்கக்கூடிய தி.நகர், திருப்போரூர், பாரிமுனை, கிளாம்பாக்கம் - கோயம்பேடு, தாம்பரம் - ஆவடி, தாம்பரம் - மாமல்லபுரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications