கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளில் சமத்துவ சமூகம் அமைக்க உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி ட்வீட்
சென்னை : கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளில் சமத்துவ சமூகம் அமைக்க உறுதியேற்போம் என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொத்தடிமைத் தொழிலாளர் முறையால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதும் மோசமான வேலைச் சூழலில் ஈடுபடுத்தப்படுவதும், துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொத்தடிமை தொழிலாளர்
தாங்கள் அல்லது தனது முன்னோர்கள் வாங்கிய கடனுக்காகவோ அல்லது வேறு அடமானத்திற்காகவோ, விருப்பப்பட்ட இடத்துக்கு செல்லுதல், விருப்பப்பட்ட வேலையை செய்தல் மற்றும் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மறுக்கப்பட்டால் அவர்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் என வரையறுக்கப்படுகின்றனர். அவ்வாறு கொத்தடிமையாக ஒருவரை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம்.

சட்டப்படி குற்றம்
எனவே தேயிலை தோட்டங்கள், நிறுவனங்கள் என எங்கும் கொத்தடிமைகளாக எவரையும் பணி அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணி அமர்த்துவோர் மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க 1976ஆம் ஆண்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்றும் இந்த முறை பரவலாக இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு நாள்
இந்நிலையில், கொத்தடிமை தொழிலாளர் முறையை முழுவதுமாக அகற்றிடவும், தமிழ்நாட்டைக் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி இன்று எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சகமனிதன் மீதான மானுட சுரண்டலாக சமூகத்தில் நிழலாடி கொண்டிருக்கும் கொத்தடிமை தொழில்முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியதாகும். இதை ஒழித்து தனிமனித உரிமைகளை காக்க அரசுக்கு துணைபுரிய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு நாளில் சமத்துவ சமூகம் அமைக்க உறுதியேற்போம்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications