மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மோடி பற்றிய கேள்விக்கு, "ஜூன் 4ஆம் தேதி பேசுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு அமைச்சரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகா உதயதிநிதோடு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தனது ஐனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
வாக்களித்த பின்னர் வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "எனது ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவேற்றியுள்ளேன். மாலை 6 மணி நேரம் உள்ளது. தயவுசெய்து பொதுமக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். யார் சரியான ஆட்சியாளர்களோ அவர்களை தேர்வு செய்யுங்கள்" என்றார்.
அப்போது செய்தியாளர்கள் மோடி பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியதுமே, அவசரமாக மறுத்த உதயநிதி ஸ்டாலின் கைகூப்பியபடி, "அதெல்லாம் வேண்டாம்.. பிரச்சாரம் முடிந்துவிட்டது. ஜூன் 4 ஆம் தேதி பேசிக் கொள்வோம்" எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இதைத் தொடர்ந்து, காரில் புறப்படுகையில் ANI செய்தி நிறுவனத்துக்கு ஆங்கிலத்தில் பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த தேர்தலில் திமுக, இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது தமிழ்நாட்டு மக்களின் மனநிலையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications