இன்றே டெல்லி செல்லும் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு செல்லும் நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பை நடத்த உள்ளார். இந்த வேளையில் தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ இந்தியா போட்டிக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பிதழ் வழங்க உள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய பேச்சுக்கள் விவாதத்தை கிளப்பி வருகின்றன. சனாதனம் குறித்த இவரது கருத்தை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்தனர்.

அதன்பிறகு தமிழக மழை வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் நிதி உதவி கோரி அவர் கூறிய வார்த்தை சர்ச்சையானது. மத்திய அரசிடம் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம். எங்களின் வரிப்பணத்தை தான் நிவாரணமாக கேட்கிறோம் என கூறியது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார். உதயநிதி ஸ்டாலின் இதுபோன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என காட்டமாக கூறினார்.
இத்தகைய சூழலில் தான் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். டெல்லியில் அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்க உள்ளார்.
அதேபோல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரையும், உதயநிதி ஸ்டாலின் சந்தித்து அழைப்பிதழ் வழங்க உள்ளார். போட்டியின் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்க உள்ளார்.
இந்தியாவில் கேலோ இந்தியா போட்டி கடந்த 2018ம் ஆண்டு இந்த போட்டிகள் தொடங்கப்பட்டது. கொரேனாா காரணமாக 2020ல் போட்டி நடத்தப்படவில்லை. 2021ல் 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவில் போட்டி நடந்தது. 2022ம் ஆண்டுக்கான போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், கட்கா, மல்லர்கம்பம், தங்-டா, ஜூடோ, யோகாசனம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications