கல்வி தாய் மதுரை பூரணம் அம்மாள்.. தேடி போய் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்.. நெகிழ்ச்சியுடன் சொன்ன விஷயம்
மதுரை: அரசு பள்ளிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி என்கிற பூரணம் அம்மாளை தேடி போய் சந்தித்து நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். இது தொடர்பாக புகைப்படங்களை பதிவிட்டுள்ள உதயநிதி, ஆயி என்கிற பூரணம் அம்மாளின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும் என்று பாராட்டி உள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இந்த செய்தி வேகமாக பரவிய நிலையில் பலரும் பூரணம் அம்மாளை பாராட்டி வருகிறார்கள்.

இந்த சூழலில் பூரணம் அம்மாள் அவர்கள் செய்த நில கொடை ஒருபுறம் எனில். அதைவிட அவர் இருபது வருடங்களுக்கு முன்பே உறவினர் ஒருவருக்கு தன் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார் என்ற செய்தி பலரையும் ஆனந்த கண்ணீரில் நனைய வைத்துள்ளார். இந்த சூழலில் நிலத்தை தானாமாக வழங்கியதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அப்போது வெகுவாக பாராட்டினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினும் பாராட்டினார். முதல்வர் அண்மையில் வெளியிட்ட பதிவில், "கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்." என்று அறிவித்திருக்கிறார்.

இந்த சூழலில் அரசு பள்ளிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி என்கிற பூரணம் அம்மாளை தேடி போய் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "அழியா கல்வி செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று நம் முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் சிறப்பு விருதினை அறிவித்துள்ள நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம். அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். ஆயி அவர்களின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும்" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications