டாஸ்மாக்கில் வரப்போகும் அடுத்தடுத்த மாற்றங்கள்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!
கோவை: தவெக ஆட்சியமைத்து 3 வாரங்களாகிவிட்டன. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. மதுவிலைக்கு துறை அமைச்சராக விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. டாஸ்மாக்கில் விரைவில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும். இரவு 10 மணிக்கு மேல் மது விற்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் விக்னேஷ் கூறியுள்ளார். மேலும் 11 டூ 11 மனமகிழ் மன்றம், பாட்டிலுக்கு 10 ரூபாய் உள்ளிட்ட பல விஷயங்களில் தவெக அரசு எடுக்கபோகும் நடவடிக்கை குறித்து அவர் பேசியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சாதி மதம் வேறுபாடு இன்றி அனைவரும் பணி செய்வோம். மக்களுக்கு உண்மையாக இருப்போம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் வாழவே தகுதி இல்லாதவர்கள். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்போம். சூலூர் சிறுமி விவகாரத்தில் முதல்வர் வருத்தப்பட்டார்.

இரவு 10 மணிக்கு மேல்
பெண்கள் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம். பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்போம். டாஸ்மாக்கில் ஊழல் அதிமாக உள்ளது. டாஸ்மாக் வருமானம் தனிமனிதர்களின் வங்கிக் கணக்கிற்கு செல்கிறது. அது அரசுக்கு செல்வதில்லை. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தவறு. டாஸ்மாக் தொழிலாளர்கள் சொல்லும் கணக்கு உண்மை தான்.
விரைவில் டாஸ்மாக் துறையில் அதிரடி மாற்றம் இருக்கும். எம்ஆர்பிக்கு மேல் ஒரு ரூபாய் வாங்க கூடாது என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார். பாட்டிலுக்கு ஸ்டிக்கர் முறை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் உள்ளது. ஸ்டிக்கர் பிரச்சனை உள்ளது. இதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வோம். 10 மணிக்கு மேல் எந்த டாஸ்மாக் மதுபான கடையும் இயங்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
11 டூ 11 பார்கள்
டாஸ்மாக் கடைகளை மூடுவது தீர்வை கொடுக்காது. மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் , மாற்று போதை பொருட்களை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம். டாஸ்மாக் நிறுவனம் சீர் செய்யப்படும். கல்வி நிறுவனங்கள், கோயில்கள், பேருந்து நிலையத்தில் 717 கடைகளை மூட வேண்டிய நடவடிக்கையில் தீவிரமாக உள்ளோம். கடந்த திமுக ஆட்சியில்11 to 11 மனமகிழ் மன்றத்திற்கு அதிகம் அனுமதி கொடுத்துள்ளார்கள்..
எப்படி அனுமதி வாங்கினார்கள் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள். மனமகிழ் மன்றத்தின் மூலம் அரசுக்கு வரும் வருமானத்தை தனி நபர்கள் வாங்கி குவித்து வருகிறார்கள். இனி அதை நடக்க விட மாட்டோம். டாஸ்மாக் நிர்வாகத்தை முதலில் முறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் பழைய மாதிரி இருக்காது. மனமகிழ் மன்றம் அனைத்திற்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும்.
தவறு செய்தால் நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளை மூடினால் தீர்வு கிடையாது. அதை நெறிமுறைப்படுத்த வேண்டும். மதுவை ஒழிப்போம் என்ற பொய்யான அறிவிப்பு கொடுப்பதில் தீர்வு கிடையாது. கடைகள் அகற்ற இடங்களை கண்காணித்து வருகிறோம். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் 2,290 ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் இல்லாமல் கொடுக்கப்படும். 10 மணிக்கு மேல் மது விற்பனை செய்பவர்கள் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு பதிலாக மூடப்பட்ட டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். கள் இறக்குவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். எதிர்கட்சிகள் தங்களுடைய இருப்பை காண்பித்து கொள்வதற்காக விமர்சனங்கள் செய்கிறார்கள். மக்களுக்கு உண்மை தெரியும். கிணத்துக்கடவு சட்டமன்ற அலுவலகத்தில் தவெக வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கவில்லை. யார் தவறு செய்தாலும் தவறு தான். தவறு இருந்தால் மாற்றிக் கொள்ளப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications