மகனை அனுப்பி வைத்த அழகிரி.. 'கலங்கிய' குடும்பம் - சோகத்தை மறைத்த ஸ்டாலின்
சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், விழாவில் மு.க.அழகிரி கலந்து கொள்ளாமல் மகன் துரை தயாநிதியை அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த மிக மிக எளிய விழாவில், 'முத்துவேல் கருணாநிதி எனும் நான்' என்று சொல்லி ஸ்டாலின் பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்ணீர் சிந்திய காட்சி, காண்போரை நெகிழ்ச் செய்தது. விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அது பாஜக சார்பில் இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், சரத்குமார், வேல்முருகன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மகனை அனுப்பிய அழகிரி
இந்த நிலையில், தம்பி மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழாவில் அண்ணன் மு.க.அழகிரி பங்குபெறாதது குடும்பத்தாரை வருத்தம் அடையைச் செய்திருக்கிறதாம். அழகிரி கலந்து கொள்ளாமல், மகன் துரை தயாநிதியை அனுப்பி வைத்திருக்கிறார். எப்படியும் அழகிரி வருவார் என்று குடும்பம் எதிர்பார்த்த நிலையில், துரை தயாநிதி மட்டும் வந்ததை குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

சைலண்ட் மோடில் அழகிரி
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்தே போதே, மனக்கசப்புடன் கட்சியில் இருந்து வெளியேறிய அழகிரி, அதன்பிறகு ஸ்டாலின் குடும்பத்துடன் பெரிதாக எந்தவித தொடர்பும் இன்றி தனித்தே இருந்தார். மகன்கள் லெவலில் பேச்சுவார்த்தை இருந்ததே தவிர, ஸ்டாலினோ, அழகிரியோ பேசிக் கொள்ளாமல் இருந்தனர். தேர்தல் நெருங்கிய போது கூட, ரஜினி கட்சி தொடங்கினால், அழகிரி அதில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி கட்சி தொடங்காததால், வேறு எந்த முன்னேற்றமும் இன்றி சைலண்ட் மோடுக்கு சென்றார்.

மகிழ்ந்த குடும்பம்
எனினும், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி அமைத்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிகாரத்திற்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவது உறுதியானது. இந்த சூழலில் தான் நீண்ட மௌனத்திற்கு பிறகு அறிக்கை வெளியிட்ட மு.க.அழகிரி, 'என் தம்பி தமிழக முதல்வராவது எனக்கு பெருமையாக உள்ளது" என்று தெரிவிக்க ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. மு.க.ஸ்டாலினுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட, மகிழ்ந்து போனார்.

பெரும் ஏமாற்றம்
இந்த நிலையில், பதவியேற்பு விழாவிற்கு மு.க.அழகிரி நிச்சயம் வருவார் என்று குடும்பத்தினர் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில், இந்த நிகழ்வை பயன்படுத்தி, மீண்டும் அண்ணன் - தம்பியை எப்படியாவது கட்டியணைக்க வைத்துவிட வேண்டும் என்று காத்திருந்தனர். ஆனால், அழகிரி தன் மகன் துரை தயாநிதியை அனுப்பி வைத்து சைலண்ட்டாக இருந்துவிட்டார். இதனால், கிடைத்த அருமையான வாய்ப்பும் பறிபோய்விட்டதே என்று ஏக வருத்தத்தில் இருக்கின்றனர் குடும்பத்தினர். அதுமட்டுமின்றி, அண்ணன் வருவார் என்று எதிர்பார்த்த தம்பி ஸ்டாலினுக்கும் ஏமாற்றம் தானாம்.












Click it and Unblock the Notifications