கருணாநிதி அறையில் கனத்த மவுனத்துடன் மு.க.அழகிரி... தயாளு அம்மாளிடம் நலம் விசாரிப்பும்... ஆசியும்..!
சென்னை: சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அங்கு தனது தாயார் தயாளு அம்மாளுவிடம் நலம் விசாரித்ததோடு கருணாநிதி அறையில் கனத்த மவுனத்துடன் சிறிது நேரம் இருந்திருக்கிறார்.
கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரை அந்த அறையில் சந்தித்துப் பேசிய காட்சிகளை அசைபோட்டிருக்கிறார் அழகிரி.
மேலும், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் தயாளு அம்மாளின் நிலையை கண்டும் கண் கலங்கியுள்ளார் மு.க.அழகிரி.

மு.க.அழகிரி
தயாளு அம்மாள் மீது அளவற்ற பாசத்தைக் கொண்டுள்ள மு.க.அழகிரி கொரோனாவுக்கு முன்பு வரை சென்னை வரும்போதேல்லாம் அவரை சந்திக்காமல் சென்றதில்லை. இடையே கொரோனா காலத்தில் கூட கோபாலபுரம் இல்லத்தை அவ்வப்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாயாரின் உடல்நலம் பற்றி அழகிரி கேட்டறிந்து வந்தார்.

கண்ணீர்
இந்நிலையில் இன்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றவர், தனது தாயார் தயாளு அம்மாளின் கரங்களை பற்றி கண்களில் கண்ணீர் கசிய அவரது நிலையை கேட்டறிந்ததோடு ஆசியும் பெற்றிருக்கிறார். மேலும், மாடியில் உள்ள கருணாநிதி அறைக்கும் சென்ற அழகிரி அங்கு ஓரிரு நிமிடங்கள் மவுனமாக நின்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அங்கிருந்து வந்திருக்கிறார்.

சூடான பேட்டி
இதனிடையே கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனையும் சந்தித்து மு.க.அழகிரி நலம் விசாரித்திருக்கிறார். இப்படி முழுக்க முழுக்க தனது பாச உணர்ச்சிகளை உள்ளுக்குள் வெளிப்படுத்திய மு.க.அழகிரி வெளியே செய்தியாளர்களை கண்டதும், ஸ்டாலின் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் சூடான பேட்டி கொடுத்தார்.

தூது செல்ல வாய்ப்பு
ரஜினிகாந்தை தாம் விரைவில் சந்திப்பேன் என்றும் ஆதரவாளர்களுடன் கலந்துபேசி தனது அடுத்தக் கட்ட முடிவை அறிவிப்பேன் எனவும் கோபாலபுரம் வாசலில் நின்றுகொண்டே கூறி திமுக தலைமையை சீண்டியுள்ளார். இதனிடையே ஜனவரி 3-ம் தேதிக்கு முன்பே கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த முக்கியமான உறுப்பினர் ஒருவர் மு.க.அழகிரியிடம் தூது செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications