Newsmakers 2018: விஸ்வரூபம் காட்டி.. சத்தம் போடாமல் காணாமல் போன மு.க.அழகிரி
இந்த ஆண்டின் மறக்க முடியாத ஒரு நபர் மு.க. அழகிரி ஆவார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சமயத்திலும் சரி, மறைந்த போதும் சரி, பரபரப்பாக பேசப்பட்டவர் அஞ்சாநெஞ்சர் அழகிரிதான்!
தென்மண்டலங்களில் திமுகவை வார்த்தெடுக்க வேண்டும் என்று அன்று கருணாநிதியால் பணிக்கப்பட்டவர்தான் அழகிரி. தென்தமிழகத்தில் கட்சியினை பலப்படுத்துவதுடன், மதுரையின் முரசொலி நாளிதழின் பொறுப்பையும் பார்க்க வேண்டும் என்று கூறி அனுப்பப்பட்டார் அழகிரி.
தந்தையின் சொல் கேட்டு நடந்த மகன், அந்த இரு பணிகளையும் சிறப்பாக செய்தார். அனைவரையும் மதித்து அன்பாக பேசும் பேச்சு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஒவ்வொரு தொண்டனின் வீட்டு நல்லது, கெட்டதுகளுக்கு உரிமையாக சென்று வரும் குணமுடையவர் அழகிரி. அனைத்து தொண்டர்களின் மீதும் பாசத்தை பொழிந்தார். கனிவாக நடத்தினார்.

கலைஞரின் பிம்பம்
கலைஞரின் பிம்பம் இந்த குணத்தை கண்ட தென்மண்டல மக்கள், இன்னொரு கருணாநிதி மதுரையில் இருப்பதுபோலவே, அதாவது "கலைஞரின் பிம்பம்" என்றே அழகிரியை பார்க்க தொடங்கிவிட்டனர். பெரும் மதிப்பும் மரியாதையையும் வைத்துள்ளனர். அது தற்போதும் எள்ளளவும் அங்கு குறையவில்லை.

திமுக வளர்ச்சி பணிகள்
ஒருவேளை கருணாநிதி, அழகிரியை தென்மண்டலம் என்று மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் திமுக வளர்ச்சி பணிகள் குறித்த பணியினை கொடுத்திருந்தால், அழகிரியின் செயல்பாடு மாநிலம் முழுவதும் வேறு மாதிரியாக கூட போயிருந்திருக்கலாம். இப்போதுகூட அழகிரியை விரும்பும் தலைவர்கள் தற்போதும் அழகிரிமீது திமுகவின் உயர்மட்ட தலைவர்களில் சிலர், அதிக ஆசையையும் பிரியத்தையும் மரியாதையையும் வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை.

நான்தான் திமுக
எனினும் கருணாநிதியை ஆஸ்பத்திரியில் சேர்த்ததில் இருந்தே மதுரைக்கும் சென்னைக்குமாக பறந்து கொண்டே இருந்தார். செய்தியாளர்களை சந்தித்தபோதெல்லாம், "நான்தான் திமுக, என்னிடம்தான் எல்லா ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என்றார். பிறகு "என் தொண்டர்கள் பலத்தை காட்டுவேன்" என்றார்.

மிரட்டல், கெஞ்சல்
கட்சியில் சேர்க்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார். கலைஞரின் மகன் நான், சொன்னதை செய்வேன் என்றார்!! பிறகு கருணாநிதி மறைவையொட்டி, கருப்பு சட்டை அணிந்து அமைதி ஊர்வலம் நடத்தினார். திரும்பவும் தன்னை கட்சிக்குள் சேர்த்து கொள்ளுமாறு கூறினார். மிரட்டல், அதட்டல், கெஞ்சல் என எல்லா வகையிலும் கட்சியில் பொறுப்பை கேட்டுவிட்டு இப்போது ஓய்ந்தே போய்விட்டார் அழகிரி.

தனி கூட்டம்
ஆனால் எதற்குமே திமுக தலைமை மசியவும் இல்லை, ஒரு பொருட்டாக இந்த விவகாரத்தை ஆரம்பத்திலிருந்தே எடுத்து கொள்ளவில்லை. எந்த தொண்டரிடத்திலும் இயல்பாக மனம் விட்டு அன்புடன் நடந்து கொள்ளும் சுபாவத்தை உடைய அழகிரிக்கென்றே ஒரு தனி கூட்டம் இப்போதும் உள்ளது.

பெருத்த மவுனம்
அழகிரியின் பெருத்த மௌனம் அவர்களை அதிகமாகவே கவலை கொள்ள செய்துள்ளது. தன் நிலைப்பாட்டை அழகிரி தெரிவிப்பாரா? வரப்போகிற 20 இடைத்தேர்தலிலும் ஆதரவாளர்களை திரட்டி போட்டியிடுவாரா? அல்லது அப்போதும் இப்படியேதான் அமைதியாக ஒதுங்கியே இருப்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால் 2018-ம் ஆண்டு அழகிரி பரபரப்பாக பேசப்பட்டது மட்டும் உண்மை.












Click it and Unblock the Notifications