துபாய் தீ விபத்து- ஸ்டாலின் 10 லட்சம் நிவாரணம் தந்தது ஏன்? - வெளியே தெரியாத சில உண்மைகள்
சென்னை: துபாயில் நடைபெற்ற பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுவரை தமிழக வலாற்றில் அயல்நாட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதே இல்லை. முதன்முறையாக ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.

ஆகவே, அயலகத்தில் பணிசெய்துவரும் தமிழர்கள் மத்தியில் இச்செய்தி ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
துபாய் டேராவில் உள்ள அல் ராஸ் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் செயல்பட்டு வந்தது. அதில் இரு தினங்களுக்கு முன்பாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆண்களும் கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியுமாகச் சேர்த்து ஆக மொத்தம் 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, தீ விபத்தில் இறந்த இருவரும் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுர வட்டம் ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம்(43) மற்றும் முகமது ரபீக் (49) என்பது தெரிய வந்தது.

அதனை அறிந்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்துவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் ஸ்டாலின் "துபாய் நாட்டில் டேரா பகுதியில் நடைபெற்ற தீவிபத்தில் சிக்கி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இமாம் காசீமும் முகமது ரபீக்கும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த இருவரும் ஏதோ தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததை போலவே இன்றுவரை தமிழ்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், அமீரக ஊடகமான 'khaleej times' தீ விபத்து குறித்து வெளியிட்டுள்ளது. அதில், 'விபத்தில் இறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும் மற்றவர்களை மீட்கும் பணியிலிருந்தபோது துரதிருஷ்டவசமாக மரணம் அடைந்தனர்' எனக் குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் துரித நடவடிக்கைக் குறித்தும் விபத்து குறித்தும் பேசத் துபாயில் உள்ள எஸ்.எஸ். மீரானை தொடர்பு கொண்டோம். இவர் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.
"தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு மாபெரும் சாதனை. வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு விபத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை எந்த அரசும் இழப்பீடாக வழங்கியதில்லை. முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார். இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

இதற்கு முன்னால் கேரள அரசு ஒருமுறை அவர்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துபாயில் விபத்தில் இறந்த போது 1 லட்சம் ரூபாய்தான் வழங்கியது. அந்தத் தொகையோடு ஒப்பிடும்போது, ஸ்டாலின் அளித்துள்ள இழப்பீடு பல மடங்கு பெரியது.
அதனால்தான் சொல்கிறேன், ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
அயலக தமிழர்களுக்காக ஒரு நலவாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்பது பல ஆண்டுக்கால கோரிக்கை. 2011இல் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடரில் அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பீட்டர் அல்போன்ஸ், கேள்வி எழுப்பினார். அன்றைக்கு முதல்வராக இருந்த மு.கருணாநிதி, 'விரைவில் அமைக்கப்படும்' என்று அறிவித்தார்.

ஆனால், பின்னால் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் 10 ஆண்டுக்காலம் வீணானதுதான் மிச்சம்.
இந்நிலையில்தான் 2017இல் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்திருந்தார். அவரிடம் இதே கோரிக்கையை முன்வைத்தோம். அவர், 'ஆட்சிக்கு வந்ததும் உறுதியாக அமைப்போம்' என்றார்.
பொதுவாகச் சொல்லாததையே செய்பவர் முதல்வர் ஸ்டாலின். ஆகவே ஆட்சிக்கு வந்ததும் சொன்னதைப்போலவே அயலக தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டது. அதன் பயனாக இன்றைக்கு முதன்முறையாக இரு அயலகத் தொழிலாளிகளின் குடும்பத்தாருக்கு நிவாரணம் போய்ச் சேர்ந்துள்ளது.
இந்தத் துபாய் விபத்து நடந்த உடனேயே முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு எடுத்துச் சென்றோம். அவரிடம் நிவாரணம் சார்ந்து கோரிக்கை வைத்தோம். அவர் எந்த தாமதமும் இல்லாமல் நிவாரணத்தை அளித்துள்ளார்.

நான் இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் பேசினேன். அவர்கள், "நாங்கள் அரசிடம் கேட்கவே இல்லை. அப்படி இருந்தும் அவர்களே தானாக முன்வந்து நிவாரணம் அளித்துள்ளனர். எங்கள் குடும்பத்திற்கு இந்த நிதி மாபெரும் உதவி" என்று கூறினார்கள்.
இந்த நலவாரியத்தால் இனிவரும் காலங்களில் இவர்களைப்போலப் பலர் பலன்பெறலாம். விபத்தின் போது ஒருவர் திடீரென்று உயிரிழக்கிறார். அவரை நம்பி உள்ள குடும்பம் நிர்கதியாய் நிற்க வேண்டி வரும். இப்படி நிதி உதவி கிடைத்தால், சற்று அவர்களால் சமாளிக்க முடியும். அதற்காகத்தான் நாங்கள் நலவாரியம் கேட்டுப் போராடி வந்தோம்.
அமீரக திமுக 2002இல் இருந்து செயல்பட்டு வருகிறது. அன்று முதல் கட்சி சார்பாக நாங்கள் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறோம். சில ஆண்டுகள் முன்பாக தாயை இழந்து துபாயில் தன்னந்தனியாக தவித்த பத்து வயதுக் குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தோம். அது அமைப்பு ரீதியான முயற்சிதான்.
ஆனால், அரசு செய்யும் உதவி என்பது வேறு. அதற்குச் சரியான சான்று அரசு அளித்துள்ள இந்த உதவி. கடந்த பிப்ரவரி மாதம் தான் அயலக தமிழர் நலவாரியக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்கள் பல திட்டங்களை அலசி ஆராய்ந்தோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பத்து லட்சம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் முழுமையாக ஆதரவு அளித்துள்ளார்" என்றவரிடம் விபத்து பற்றிக் கேட்டோம்.
"இந்த விபத்தில் இறந்த இருவரும் ஏதோ தீயில் சிக்கித் தெரியாமல் இறக்கவில்லை. தீ விபத்து நடக்கும் போது இவர்கள் தரைதளத்திலிருந்துள்ளனர்.
இது ரமலான் நோம்பு மாதம் என்பதால் பலரும் மதிய நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆகவே தீ விபத்தை அவர்களால் உடனடியாக உணர முடியவில்லை. அதற்குள் தீ பரவி புகையில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளனர். அவர்களை மீட்பதற்காகத்தான் நம் தமிழ்நாடு தொழிலாளிகள் இருவரும் குடியிருப்புக்குள் புகுந்துள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களும் புகைக்குள் சிக்கி இறங்க நேர்ந்துள்ளது. இது ஒரு வீரமரணம். அப்படித்தான் துபாய் பத்திரிகைகள் எழுதி உள்ளனர். 'ரியல் ஹீரோஸ்' இவர்கள் எனப் பலர் செய்தி வெளியிட்டுள்ளனர். நம் கள்ளக்குறிச்சி தொழிலாளிகள் இருவரும் சேர்ந்து அல்ஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பலரைத் தீயிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்டு உயிரிழந்துள்ளனர். அதுவே உண்மை" என்கிறார் மீரான்.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications