திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா.. மக்களுக்கு நம்பிக்கை தரும் அந்த ஒரு வார்த்தை!
சென்னை: திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது மக்களுக்கு நம்பிக்கை தரக் கூடியதாக அமைந்துள்ளது.
தேர்தல் என வந்துவிட்டால் இலவசங்களையும் தேர்தல் அறிக்கைகளையும் அள்ளிவிடுவது அனைத்து கட்சிகளும் செய்யும் ஒரு காரியம் ஆகும். எந்த மாநிலமாக இருந்தாலும் சரி இது தேர்தல் ஹீரோ போல் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையை இன்றைய தினம் வெளியிட்டது. பெரும்பாலும் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் இருக்கும்.
தேர்தல் அறிக்கை
ஆனால் இந்த முறை திமுகவின் அறிக்கையில் அது போன்ற இலவச அறிவிப்புகள் ஏதும் இல்லை. இது பெரும்பாலானோர் மனதை கவர்ந்துள்ளது. பொதுவாக தேர்தல் வாக்குறுதிகளை கட்சிகள் அள்ளிவிடுவார்கள். ஆனால் அதில் 80 சதவீதம் நிறைவேற்றாமல் விட்டுவிடுவார்கள் என்ற பேச்சு எல்லா கட்சிகளின் மீதும் உள்ளது.
குற்றச்சாட்டு
ஆட்சியை பிடித்ததும் அவசர அவசரமாக ஏதே சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு மிச்சத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு மத்திய, மாநில கட்சிகள் மீது இருக்கத்தான் செய்கிறது. இது அடுத்த தேர்தலிலும் எதிரொலிக்கிறது. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை இதில் புதிய வாக்குறுதிகளா என எதிர்க்கட்சிகளும் மக்களும் கேட்கும் அளவுக்கு இருக்கிறது.
தேர்தல் அறிக்கை
ஆனால் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கையில் ஒன்றை கவனித்தீர்களா? அதுதான் செயலாக்க அமைச்சகம். அது என்ன செயலாக்க அமைச்சகம் என்கிறீர்களா? திமுக வெளியிட்ட 500- க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
திமுக
அந்த அமைச்சகத்தின் பெயர்தான் செயலாக்க அமைச்சகம். இது தமிழகத்தில் முதல் முறையாக கேள்விப்படும் அமைச்சகமாக இருக்கிறது. அதன் நோக்கமும் முதல்முறையாக கேள்விப்படுவது போல் இருக்கிறது. இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஒரு வித பிடிப்பை திமுக கொடுத்துவிட்டது என்றே சொல்லலாம்.