முதல்வரை பார்க்க விடுமாறு கதறிய கர்ப்பிணி பெண்.. “கூச்சல் கேட்டு கூப்பிட்டு..” நெகிழ்ச்சி சம்பவம்!
நாகப்பட்டினம் : நாகையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்க முயன்ற கர்ப்பிணி மீனவப் பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர்.
அதனைக் கவனித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த மீனவப் பெண்ணை அழைத்து அவரது மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Recommended Video
டெல்டா மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், மீனவப் பெண்ணின் கதறலை கவனித்து, அழைத்து மனுவைப் பெற்றுக்கொண்ட நிகழ்வு அங்கிருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா பயணம்
டெல்டா பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளையும், அரசு அலுவலகங்களையும் ஆய்வு செய்து வருகிறார். மக்கள் மனநிறைவுடன் செல்வதை உறுதிப்படுத்த அரசு அலுவலகங்களில் தனது ஆய்வுகள் தொடரும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில்
இந்த நிலையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முதல்வரை நெருங்காத வகையில் பாதுகாவல் அதிகாரிகள் பணியாற்றினர்.

அழைத்து குறைகளைக் கேட்டார்
அப்போது அங்கு கூடி இருந்த மீனவப் பெண்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க முயற்சித்தனர். ஆனால் பாதுகாவலர்கள் அவர்களை விட மறுத்ததால் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மீனவப் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் பாதுகாவலர்கள் அவர்களை முதல்வரை சந்திக்க அனுமதி மறுத்தனர். அவர்கள் கூச்சலிட்டதைக் கவனித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்ப்பிணி பெண் உள்ளிட்டவர்களை அழைத்து குறைகளை கேட்டறிந்தார்.

பெண்களிடம் உறுதியளித்த ஸ்டாலின்
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நாகை மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டும் என அந்த மீனவப் பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். அவர்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களது கோரிக்கையைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவப் பெண்களிடம் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications