''மம்தா மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்''... பொங்கி எழுந்த மு.க.ஸ்டாலின்!
சென்னை: மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரசாரத்தின்போது சிலர் தன்னை தாக்கியதாகவும், தனக்கு காலில் அடிபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் சம்பவம் நடந்தபோது போலீசார் யாரும் அருகில் இல்லை என்றும் மம்தா பானர்ஜி சரமாரியாக குற்றம்சாட்டினார்.
மம்தா பானர்ஜி மீதான தாக்குதல், இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் களம்
மேற்கு வங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் வலது கரமாக விளங்கிய மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி சமீபத்தில் பாஜகவில் இனைந்தார். மம்தா தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடட்டும் என்று அவர் சவால் விடுத்தார்.

தீவிர பிரசாரத்தில் மம்தா
இந்த சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் களம் இறங்குவதாக அறிவித்தார். சுவேந்து அதிகாரியும்-மம்தாவும் நந்திகிராமில் நேரடியாக மோதுகின்றனர். இதனால் அங்கு பாஜக சார்பிலும், திரிணாமுல் சார்பிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி, அங்கு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்

மம்தா மீது தாக்குதல்
பின்னர் அங்கிருந்து வெளியேறி, காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.நான்கைந்து நபர்கள் தன்னை தள்ளிவிட்டதால் காலில் அடிபட்டு வீங்கியிருப்பதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் சம்பவம் நடந்தபோது போலீசார் யாரும் அருகில் இல்லை என்றும் மம்தா பானர்ஜி சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்
மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தியதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், '' மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மீது உடனடியாக நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications