யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன? வருமானம் வந்தால் சரி என நினைப்பது தவறு -மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன? வருமானம் வந்தால் சரி என நினைப்பது தவறு என அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி; அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும்!
யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! கொரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம்''. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் போராட்டம் நடத்தின. தற்போது சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து மீண்டும் ஒரு போராட்டம் நடத்தும் திட்டத்தில் இருக்கிறது திமுக. இது குறித்து ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications