காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் வேண்டும்... விலையேற்றத்தை தடுக்க இது தான் வழி -ஸ்டாலின்
சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற, கேரளா அரசு போல் "காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்" செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்" செய்யும் சட்டத்தை அதிமுக அரசு கொண்டுவராவிட்டால் திமுக ஆட்சி அமைந்தவுடன் கொண்டு வரப்படும் என்ற உறுதியை அவர் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

எகிறும் விலை
நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் ஆவேசமான எதிர்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்தியது. இந்த வேளாண் சட்டங்களினாலும் - அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ள எடப்பாடி அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கையாலும், தீபாவளிப் பண்டிகை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது.

வெங்காய விலை
இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டவுடன் பருப்பு விலை 25 முதல் 60 ரூபாய் வரை உயர்ந்தது. சமையல் எண்ணெய் விலை உயர்ந்து - இன்றும் தொடருகிறது. வெங்காய விலையோ கிலோ 100 முதல் 160 ரூபாய் வரை உயர்ந்து ஏழை - எளிய, நடுத்தர மக்களைக் கண்ணீர் சிந்த வைத்தது. பிறகு வெங்காய விலை இறங்குமுகமாகி - இப்போது உருளைக்கிழங்கு விலை ஏறுமுகமாகி விட்டது. இன்றைக்கு உருளைக்கிழங்கையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியச் சந்தை வந்து விட்டது.

பகிரங்க புகார்
வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக் கிழங்கு, காய்கறிகள், என அனைத்துப் பொருட்களும், இந்த மூன்று சட்டங்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளன. மக்களுக்குத் தாராளமாகக் கிடைப்பது செயற்கையாகத் தடுக்கப்பட்டு விட்டது. விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு - தீபாவளிப் பண்டிகை நேரத்தில் இடைத்தரகர்களால் விலை ஏற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

செயலிழப்பு
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, அவர்களுடைய செலவு மற்றும் உழைப்புக்கேற்றபடி உரிய விலை கிடைக்க வேண்டும், மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் "உழவர் சந்தைகள்" தமிழ்நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான அந்த உழவர் சந்தைகளை அ.தி.மு.க. அரசு செயலிழக்க வைத்து - அந்த சந்தைகளை அப்படியே பாழாக்கி இழுத்து மூட வைத்து விட்டது.

விவசாயிகள் பாதுகாப்பு
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி - கேரளா அரசு போல் "காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்" செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க. அரசு உடனே சட்டம் கொண்டு வரவில்லையென்றால் - விரைவில் மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைக்கப்போகும் திராவிட முன்னேற்றக் கழகம், கேரள மாநில அரசு கொண்டு வந்திருப்பது போன்று காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரும்.












Click it and Unblock the Notifications