கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்
சென்னை: கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல் புயல் சேதத்துக்கு இழப்பீடு தர வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
மேலும், நிவர் புயல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது மட்டுமே சாதனையாக முதல்வர் கருதக்கூடாது என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மக்கள் தவிப்பு
மூன்றாவது நாளாக சென்னை மாநகரத்தில் ‘நிவர்' புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசி வருவதிலிருந்து, அ.தி.மு.க. அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைநீர் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காமல், இந்தக் குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல் மக்களைத் தவிக்க விட்டுள்ளதைக் காண முடிந்தது.

மழைநீர் வடியவில்லை
தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை. கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகள் - ஏன், எனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலேயே பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவும் இல்லை; வெளியேற்றப்படவும் இல்லை.

ஆக்கப்பூர்வ நடவடிக்கை
"முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் பாதிப்புகள் குறைந்து விட்டது" என்று கூறும் முதலமைச்சரும், அமைச்சர்களும் இன்னும் தேங்கி நிற்கும் தண்ணீர் பற்றிக் கவலைப்படாமல், பேட்டியளித்துக் கொண்டிருப்பது மட்டுமே, "நிவர் சாதனை" என்று செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
அரசின் சார்பில் "விளம்பரத்திற்காக" பேட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டு - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

இன்னலில் மக்கள்
"கணக்கு எடுக்கிறோம்" என்று காலம் கடத்தாமல் - உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம் - வீடுகள் இழப்பு - உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும் - உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications