உங்களுடன் இருப்பவர் வேண்டுமா? நாடகம் நடிப்பவர் வேண்டுமா? - விஜய் போட்டியிடும் பெரம்பூரில் ஸ்டாலின்!
சென்னை: "உங்களுடன் இருந்து உங்களுக்காக பணியாற்றுபவர் வேண்டுமா? அல்லது எங்கோ இருந்து புதுசா அரசியலுக்கு வந்து, நாடகத்தை நடச்சிட்டு இருப்பவர் வேண்டுமா? யார் வேணும்னு சிந்திச்சு பாருங்க.." என பெரம்பூர் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் முழு வீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்தவகையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை பெரம்பூர் சட்டசபை தொகுதி, விஜய் போட்டியிடுடுவதால் ஸ்டார் தொகுதியாக உள்ளது. பெரம்பூரில் தவெக தலைவர் விஜய், திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர், என்டிஏ கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா, தவெக சார்பில் சி.ஜோசப் விஜய், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும், பெரம்பூர் உள்ளிட்ட ஸ்டார் தொகுதிகளின் நிலவரங்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த சூழலில், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் யார் யாருக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று பெரம்பூர் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், "உங்களுடன் இருந்து உங்களுக்காக பணியாற்றுபவர் வேண்டுமா? அல்லது எங்கோ இருந்து புதுசா அரசியலுக்கு வந்து, நாடகத்தை நடச்சிட்டு இருப்பவர் வேண்டுமா? யார் வேணும்னு சிந்திச்சு பாருங்க.." எனப் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "நான் யாரையும் மரியாதை இல்லாமல் தரக்குறைவாகப் பேசும் வழக்கம் இல்லை. நாம் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்ததில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ள 10% திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதுவும் முடியாததன் காரணம் மத்திய அரசு நிதி ஒதுக்காததுதான்.
நமது வீட்டு பிள்ளைகள் படிப்பதற்கு நிதி ஒதுக்க மறுக்கிறார்கள். இந்தி படிக்க வேண்டுமாம். மும்மொழிக் கொள்கையை ஏற்றால் நிதி ஒதுக்குகிறார்களாம். நீங்கள் 4000 கோடி அல்ல, 10,000 கோடி தருகிறோம் என்று சொன்னாலும் நாங்கள் இந்தி திணிப்பை ஏற்க மாட்டோம்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூபாய் 1000 தந்து கொண்டிருக்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் தருவோம். புதுமைப்பெண் திட்டத்திலும் உதவித்தொகையை ரூபாய் 1500 ஆக உயர்த்துவோம். இல்லத்தரசி கூப்பன் ரூபாய் 8000 தருகிறோம். அந்த 8000 கூப்பனை வைத்து எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்" எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications