வலியை தந்த வாழை..என் உழைப்பை கொண்டாடி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின்! நெகிழ்ந்து பேசிய மாரி செல்வராஜ்
சென்னை: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை படத்தை சான் பிரான்சிஸ்கோவில் பார்த்ததாகவும், ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி என வாழ்த்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்..
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழை படம் வெளியானது. வாழை தோப்பு பணியாளர்களின் வேதனையை ரத்தமும் சதையுமாக திரையில் அப்படியே கொண்டு வந்திருந்தார் மாரி செல்வராஜ்.

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நடிகர்கள் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற விபத்து காட்சி அனைவரையும் உருக வைத்தது. விபத்து காட்சி தான் படத்தின் மையக்கரு என்பதோடு இந்த விபத்தை நேரில் கண்டு வலியை அனுபவித்தவர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜின் சொந்த ஊரான புளியங்குளத்தை சேர்ந்த 15 பேர், நாட்டார் குளத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 19 பேர் இந்த விபத்தில் தங்கள் உயிர்களை பறிகொடுத்தனர்.
மாரி செல்வராஜின் உடன் பிறந்த சகோதரியும் இந்த விபத்தில் உயிரிழந்தவர் என்பதோடு, மாரி செல்வராஜ் வாழைத் தோட்டத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து படம் வெளியான நிலையில் பலரும் தங்கள் உணர்வோடு இணைந்ததாக இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து வாழை படத்தை பார்த்து விட்டு தமிழகத்தின் பிரபல இயக்குனர்களும், நடிகர்களும், அரசியல் தலைவர்களும், பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் "வாழை" படத்தை பார்த்துள்ளார். தொடர்ந்து படத்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!” என கூறியுள்ளார்.
இதனை படத்தை பார்த்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். இதுதொடர்பாக,”என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications