வெட்டி ஒட்டி பரப்ப காத்திருக்கிறார்கள்! திமுக பேச்சாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு!
சென்னை: திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பேசும் சொற்பொழிவாளர்கள் கண்ணியம் குன்றிடாமல் பேச வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உரிய தயாரிப்புகளுடனும், புள்ளிவிவரங்களுடனும் பேசச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவுறுத்தல் வருமாறு;
இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக்கூடிய கழகச் சொற்பொழிவாளர்கள் உரிய தயாரிப்புகளுடனும், புள்ளிவிவரங்களுடனும் கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
கடந்த இரண்டாண்டுகளில் எண்ணற்ற சாதனைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், பொறுப்பான முறையிலும் எடுத்துரைக்க வேண்டும்.
உங்களது பேச்சை நாடே உற்று நோக்குகிறது என்பதை உணர்ந்து நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொருவரிடமும் நீங்கள் கொண்டு சேர்த்திட வேண்டும்.
அதேநேரம் உங்களது பேச்சுகளை எதிர்க்கட்சியினரும், திருகு வேலைகளில் ஈடுபடும் சில ஊடகங்களும், வெட்டியும் ஒட்டியும் தவறாகப் பொருள்படும்படி மாற்றி பரப்பிட காத்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு கண்ணியம் குன்றிடாமல் கருத்துகளை மக்களிடம் முன்வையுங்கள்.
மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலைச் சிற்றுண்டித் திட்டம், நம்மைக் காக்கும் 48, புதிய முதலீடுகள், அதிகத் தொழிலகங்கள், நிறைய வேலைவாய்ப்புகள் என அனைத்து மக்களுக்குமான - அனைத்துப் பகுதிகளுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் மக்களின் இதயத்தில் பதிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது சொற்பொழிவாளர்களின் கடமை.
திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications