காந்தி - தோழர் ஜீவா சந்தித்த இடத்தில் பிரமாண்ட மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மகாத்மா காந்தி, தோழர் ஜீவா சந்தித்து உரையாடிய நிகழ்வை காட்சிப்படுத்தும் சிலையுடன் ரூபாய் 3.27 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை இன்று திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சிராவயலில் மகாத்மா காந்தி மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவானந்தம் ஆகியோர் சந்தித்துப் பேசிய வரலாற்று நிகழ்வைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தைத் திறந்து வைக்க வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையிலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 1934-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சிவகங்கை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட போது, சிராவயலில் அவரைத் தோழர் ஜீவானந்தம் சந்தித்து உரையாடினார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ரூபாய் 3.27 கோடி மதிப்பீட்டில் இந்த மணிமண்டபம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் காந்தியும் ஜீவாவும் அமர்ந்து உரையாடுவது போன்ற தத்ரூபமான வெண்கலச் சிலைகளும், அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளன.
மதுரையில் இருந்து இன்று சாலை மார்க்கமாகச் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று வரவேற்பை வழங்கினர். மேள தாளங்கள் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.

சிராவயலில் மணிமண்டபத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். இந்த மணிமண்டபம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் காந்தியச் சிந்தனைகளும், ஜீவாவின் பொதுவுடைமைத் தத்துவங்களும் சங்கமித்த இடத்தைப் போற்றும் ஒரு வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது.
மணிமண்டபத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ரூபாய் 3.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபம், வெறும் கட்டிடமாக மட்டுமின்றி மக்களின் பயன்பாட்டிற்கானத் திருமண மண்டபமாகவும் திகழும் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மகாத்மா காந்தி இப்பகுதிக்கு வந்தபோது, அவருக்காகத் தோழர் ஜீவா ஓர் ஆசிரமத்தைக் கட்டியிருந்தார். அப்போது காந்தி, ஜீவாவைப் பார்த்து, உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு ஜீவா அவர்கள் அந்த ஆசிரமத்தைக் காட்டினார். ஆனால், காந்தி சிரித்துக்கொண்டே, 'இல்லை.. இல்லை.. இந்த இந்தியாவே உங்களது சொத்து' என்று கூறினார். அந்தப் பொன்மொழிகள் இன்றும் வரலாற்றில் பதிவாகியுள்ளன" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications