கொள்கையற்ற கூட்டம்.. புதிய எதிரிகள்! தவெக விஜயை மறைமுகமாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்! என்ன மேட்டர்?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் திருச்சியில் மிகப் பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டிப் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கும் நிலையில், திமுகவினருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். கொள்கையற்ற கூட்டம் எனவும் புதிய எதிரிகள் எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தைத்தான் மறைமுகமாகச் சாடி இருக்கிறார் என்கின்றனர். மேலும், விஜய் திருச்சியில் மாநாடு நடத்தும் அதே நாளன்று மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது திமுகவினருக்கு ஏற்பட்டிருக்கும் பயத்தை வெளிக்காட்டுவதாகவும் கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அரசியல் களத்துக்கு வந்திருந்தாலும் மக்களைச் சந்திக்கும் வகையில் கள அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு மாநில மாநாடுகள் மற்றும் ஒரு சில நிகழ்வுகளைத் தவிர மக்களைச் சந்திக்க விஜய் வரவில்லை. இதனால் அவர் மீதான ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

தவெக விஜய்
இந்த நிலையில் தான் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நடிகர் விஜய் மக்களைச் சந்திக்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியது. அதுவும் திருச்சியில் இருந்து விஜய் இந்த சந்திப்பைத் துவக்குகிறார் என்ற தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திட்டமிட்டபடி இன்று பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார் விஜய். வழக்கமாக விமான நிலையத்திலிருந்து திருச்சிக்குச் செல்ல வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகும்.
விஜய் பிரச்சாரம்
ஆனால் நான்கு மணி நேரம் பயணம் செய்து பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வந்தார் விஜய். விமான நிலையம் தொடங்கி டிவிஎஸ் டோல்கேட், பாலக்கரை, பழைய மதுரை சாலை, பிரச்சாரம் நடக்கும் மரக்கடை வரை சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்க்கு வரவேற்புக் கொடுத்தனர். அதே நேரத்தில் சாலைகளின் ஓரங்களில் திரண்டு நின்று மரங்களின் மீது ஏறியும், கட்டிடங்கள் மீது ஏறியும், மின்கம்பங்கள் மீது ஏறி நின்றும் ரசிகர்கள் விஜயைப் பார்க்க ஆர்வம் காட்டினர்.
திருச்சி கூட்டம்
இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் காவல்துறை உத்தரவுகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் காற்றில் பறக்கவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விமான நிலையத்திலிருந்து விஜய் பிரச்சாரம் நடந்து வரும் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளூர் பயணிகளும் வெளியூர் பயணிகளும் கடும் அதிருப்தி அடைந்தனர். ரசிகர்கள் ரசிகர்களாகவே தொடர்வதாகவும், அவர்கள் இன்னும் தொண்டர்களாக மாறவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
முக ஸ்டாலின்
இந்த நிலையில் தான் கொள்கையற்ற கூட்டம் என தமிழக வெற்றிக் கழகத்தினரை மறைமுகமாக விமர்சித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக சார்பில் கரூரில் முப்பெரும் விழா நடைபெற இருக்கும் நிலையில் இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், பழைய, புதிய எதிரிகளால் திமுக எனும் எஃகு கோட்டையை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எனவும், கொள்கை இல்லாக் கூட்டத்தைச் சேர்த்து கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் அல்ல திமுக எனவும், நாம் கூடும் போதும் கூட்டம் முடிந்து புறப்படும் போதும் கொள்கை பட்டாளமாகக் கூட வேண்டும், லட்சிய வீரர்களாகப் புறப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திமுக விமர்சனம்
அதாவது திருச்சியில் விஜயின் ரசிகர்கள் அதிக அளவில் அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில் கொள்கை இல்லாக் கூட்டம் என அவர்களை விமர்சித்து மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாகவும், பழைய எதிரிகள் என அதிமுக பாஜகவையும், புதிய எதிரிகள் என தமிழக வெற்றிக் கழகத்தை ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் என்கின்றனர். அதே நேரத்தில் இதுவரை விஜயின் பேச்சுக்கு எதிர்வினை தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக அவர் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னரே மறைமுகமாகச் சாடி இருப்பது திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை வெளிக்காட்டுவதாகக் கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications