'சக்தி வாய்ந்த முதல்வர் ஸ்டாலின்'..தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்.. கைத்தட்டலால் அதிர்ந்த அரங்கம்
சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி படிப்பில், பல துறையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார். மேலும், இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மு.க.ஸ்டாலின்
விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- இதுவரை வீட்டுக்கு பிள்ளையாக இருந்த நீங்கள், தற்போது மருத்துவ துறைக்கு வந்து விட்டதன் மூலம் நாட்டு மக்களுக்கு பிள்ளையாகி இருக்கிறீர்கள். உங்களிடத்தில் நான் ஒரு கோரிக்கை வைக்க போகிறேன். இன்றைய காலகட்டத்தில் கிராமப்புற மருத்துவ சேவை என்பது மிகவும் சவாலாக உள்ளது.

கிராமப்புறங்களில் சேவை
மருத்துவ படிப்புகளை முடித்து விட்டு நீங்கள் மருத்துவராக பணியாற்றும்போது நீங்கள் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்; அங்கு சேவையாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்த கடமையை நீங்கள் செய்ய வேண்டும். மக்கள் மருத்துவர்கள் என்னும் பெயரை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது மருத்துவ துறைக்கு திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சக்தி வாய்ந்த முதல்வர் ஸ்டாலின்
இதனை தொடர்ந்து பேசத் தொடங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, '' சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்களே'' என்று தொடக்கத்தில் கூறியபோது அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய ஆர்.என்.ரவி, '' மருத்துவ மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் இந்த பட்டம் சாத்தியமாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் நல்வாழ்வு மிக முக்கியமானதாக உள்ளது.

திருக்குறள் படியுங்கள்
ஏழைகளுக்கு மருத்துவம் எளிதில் கிடைக்கும் நிலையை உருவாக்குவதே நமது எண்ணமாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னிலையில் சென்று வருகிறது. நமது சங்க இலக்கியங்களில் ஏராளமான அறிவு சார்ந்த விஷயங்கள் உள்ளன. அதனை நாம் பார்க்க வேண்டும். 941 முதல் 950 வரையிலான 10 திருக்குறள்களை மாணவர்கள் படிக்க வேண்டும்' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications