ஒன் டூ ஒன்னில் போட்டுக் கொடுத்த உடன்பிறப்புகள்! கண் சிவந்த ஸ்டாலின்! கலக்கத்தில் மாவட்ட செயலாளர்கள்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது திமுக. கடந்த ஆண்டே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக உடன்பிறப்பே வா 'ஒன் டூ ஒன்' சந்திப்பு மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் ஒழுங்காக கட்சிப் பணியாற்றாத சில நிர்வாகிகளை பதவியில் இருந்து தூக்கி அடித்திருக்கிறார் ஸ்டாலின். கோவை, திருநெல்வேலி, விருதுநகர், தர்மபுரி என அந்த பட்டியல் நீண்டு வருகிறது. இதனால் கலக்கத்தில் இருக்கின்றனர் மாவட்ட செயலாளர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலினும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அதனை மிக தீவிரமாக கருதுகின்றனர். இதுவரை இரு முறை தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்ததில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்க ஸ்டாலின் முயன்று வருகிறார்.

மு.க.ஸ்டாலின்
அதிமுக அடுத்தடுத்து இருமுறை ஆட்சியை இழந்ததில்லை என்ற பெருமையை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார். இப்படி இரு தரப்பும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வந்தாலும் முன்னணியில் இருப்பது திமுக தான். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணிக்குழு கே.என். நேரு தலைமையில் திமுக தேர்தல் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி கூட்டங்களை திமுக தலைமை நடத்தி வருகிறது.
திமுக மாற்றம்
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 'ஓரணியில் தமிழ்நாடு', 'உடன்பிறப்பே' உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மூலம் தொண்டர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார். மேலும் 'ஒன் டூ ஒன்' மூலம் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவ்வாறு தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரம், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து வருகிறார்.
மாவட்ட செயலாளர் நீக்கம்
இதில் அதிகப்படியான புகார்கள் வந்த மாவட்டச் செயலாளர்கள் பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் நகர ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கோவை, திருநெல்வேலி பகுதிகளில் இந்த மாற்றம் நடைபெற்றிருக்கிறது. கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக் நீக்கப்பட்டு செந்தமிழ்ச்செல்வன் பொறுப்பாளர் ஆக்கப்பட்டிருக்கிறார். விருதுநகர் சிவகாசியில் ஏழு வட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
ஒன் டூ ஒன் சந்திப்பு
திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது தருமபுரியிலும் நிர்வாகிகள் நீக்கம் நடைபெற்று வருகிறது. தன்னுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளிடம் நேரடியாக ஸ்டாலின் புகார்களைப் பெறும் நிலையில் சரியாகப் பணியாற்றாத யாராக இருந்தாலும் தூக்கி அடிக்கப்படுவார்கள் எனக் கூறுகின்றனர் திமுகவினர். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு செயல்படுவதால் மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றியச் செயலாளர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications