தேர்தல் நேரத்தில் 3 மாவட்ட இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. "மினி டைடல் பார்க்" அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்!
சென்னை: கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 60,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் அமைகிறது இந்த மினி டைடல் பூங்காக்கள்.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும், டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.

அதன்படி விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் முதல்வர் ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. மேலும், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைத்திட முதல்வர் ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இவை மட்டுமின்றி நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இன்று அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டத்தில், 42 கோடி செலவில் 58,660 சதுர அடி பரப்பளவில் சுமார் 3 தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. அதே போல் கரூர் மாவட்டத்தில் 37 கோடி ரூபாய் செலவில், 64,000 சதுர அடியில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.மேலும் புதுக்கோட்டை மாவட்டம் நத்தம் பண்ணையில் சுமார் 37 கோடியில் 60,386 சதுர அடியில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.
கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 1,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இவை ஒவ்வொன்றும் சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்கள் கொண்டு IT, ITeS, BPO's மற்றும் Start-ups போன்ற நிறுவனங்கள் இடம்பெறும் வகையில் கட்டப்படவுள்ளன. இந்தப் பூங்காக்கள், தலா 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் 1800 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் அனைத்து அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
இந்த மினி டைடல் பூங்காக்களின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வசித்து வரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன் அப்பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications